Published : 11 Jan 2024 05:39 AM
Last Updated : 11 Jan 2024 05:39 AM

அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் திடீர் ராஜினாமா: புதிய தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமனம்

ஆர்.சண்முகசுந்தரம் மற்றும் பி.எஸ்.ராமன்

சென்னை: அரசு வழக்கறிஞர்களுக்கு இடையிலான பனிப்போரில் முதல்வர் தலையிடும் அளவுக்கு சென்றதால் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் புதிய அரசு தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமனை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மற்ற கட்சிகளைக் காட்டிலும் திமுகவில் உள்ள வழக்கறிஞர் அணி மிகவும் வலுவானது என்பதால் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்களில் உள்ள அரசு வழக்கறிஞர்களுக்கான பதவிகளைப் பிடிப்பதில் திமுக வழக்கறிஞர்கள் இடையே போட்டா போட்டி இருப்பது வழக்கம். அதன்படி திமுகஆட்சி பொறுப்பேற்றதும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பலத்த போட்டிக்கிடையே அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் கடந்த 2021-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே கடந்த 1989- 91 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் தமிழக அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகவும், 1996-2001 திமுக ஆட்சிக்காலத்தில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராகவும் பதவி வகித்துள்ள ஆர்.சண்முகசுந்தரம், திமுக எம்பியாகவும் பதவி வகித்துள்ளார்.

அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் பொறுப்பேற்றது முதல் தமிழக அரசின் சார்பில் பல்வேறு வழக்குகளில் திறம்பட ஆஜராகி வாதிட்டு வந்தாலும், அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக திமுக வழக்கறிஞர்களுக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாகவும், பல்வேறு வழக்குகளில் தமிழக அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டதாலும் முதல் ஓராண்டிலேயே அவரை நீக்கிவிட்டு மற்றொரு திமுக மூத்த வழக்கறிஞரை அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக அப்போது தகவல் வெளியானது. ஆனால் அப்போது சண்முகசுந்தரம் மாற்றப்படவில்லை. கட்சிக்காக அவர் செய்திருக்கும் முக்கியமான பணிகளை கருத்தில்கொண்டு அவரை நீக்கும் முடிவை கட்சி மேலிடம் எடுக்கவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம், உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ஒருவருக்கு எதிரான பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த அரசு தலைமை வழக்கறிஞர் என்ற முறையில் மூத்த பெண் வழக்கறிஞர் ஒருவரின் தலைமையில் விசாகா கமிட்டியை அமைத்து சண்முகசுந்தரம் உத்தரவிட்டிருந்தார். இதனால் அரசு வழக்கறிஞர்கள் மத்தியில் மறைமுகமாக நிலவி வந்த கருத்து வேறுபாடு வெளிப்படையாக வெடித்து முதல்வர் வரை முறையீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்னால் யாருக்கும் எவ்வித சங்கடமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தோடு அரசு தலைமை வழக்கறிஞர் பதவியை சண்முகசுந்தரம் திடீரென ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. தனது தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக இந்த பதவியை ராஜினாமா செய்வதாக சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இவரது ராஜினாமாவை தமிழக அரசும் உடனடியாக ஏற்று, தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனை நியமிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது. மூத்த வழக்கறிஞரான பி.எஸ்.ராமன் ஏற்கெனவே திமுக ஆட்சி காலத்தில் அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு கோணத்திலும் இதை நீதித்துறை வட்டாரத்தில் பார்க்கின்றனர். உயர் நீதிமன்றம் தற்போது திமுக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறது. ஏற்கெனவே மற்றொரு சொத்து குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த 3 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு காரணமாக அமைச்சராக பதவி வகித்த பொன்முடி தனது பதவியை இழக்க நேரிட்டது.

அதேபோல மற்றொரு அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு இதுவரைஜாமீன் கிடைக்கவி்ல்லை. இந்நிலையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிரான சொத்து குவி்ப்பு வழக்குகளும் விரைவில் மறு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ள நிலையில், அரசு வழக்கறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்தால் சரியான ஒருங்கிணைப்பு இருக்காது என்ற எண்ணத்திலேயே சண்முகசுந்தரத்தை மாற்ற அரசு முடிவு எடுத்ததாகவும், அவர் முந்திக்கொண்டு தானாகவே தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x