Last Updated : 31 Jan, 2018 09:45 AM

 

Published : 31 Jan 2018 09:45 AM
Last Updated : 31 Jan 2018 09:45 AM

வடலூரில் இன்று தைப்பூச ஜோதி தரிசனம்: வாழ்வியல் நெறிகளை போதித்தவர் வள்ளலார்

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் 1823-ம் ஆண்டு ராமையா - சின்னம்மை தம்பதியருக்கு பிறந்தவர் வள்ளலார்.

வள்ளலாருக்கு சபாபதி, பரசுராமன் என்ற சகோதரர்களும், சுந்தராம்பாள், உண்ணாமுலை என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். ஆன்மிகத் தேடலில் தன்னைக் கரைத்துக் கொண்ட வள்ளலாருக்கு இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லை. பெற்றோரின் வற்புறுத்தலால் தன் சகோதரி உண்ணாமுலை அம்மையின் மகள் தனகோடியை மணந்து, மனைவியையும் ஆன்மிக வழியில் ஈடுபடுத்தினார்.

சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப் பெற்று பல நூற்றுக்கணக்கான அருட் பாடல்களை அருளியுள்ளார். அவர் மக்களுக்கு அருளிய பாடல்கள் ‘திருவருட்பா’ என்று போற்றப்படுகிறது.

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று கூறிய வள்ளலார், மானிடச் சமூகம் உண்மையும் புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே `திருவருட்பா’வாகும்.

ஜீவ காருண்ய நெறிகளையும், செம்மையான நல்ல அறநெறி வாழ்க்கைக்கு உரிய வாழ்வியல் தத்துவங்களையும் போதித்தவர் வள்ளலார்.

‘கடவுள் ஒருவரே - இறைவன் ஒளி வடிவானவன்’ என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் 1867-ம் ஆண்டு வடலூரில் சத்திய ஞான சபையை வள்ளலார் நிறுவினார்.

ஜோதி தரிசனம்

மனித ஸ்தூல உடல் அமைப்போடு ஒப்பிடும் வகையில் சத்தியஞான சபை எண் கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தெற்கு வாயில் வழி உள் சென்றால், வலப்புறம் பொற்சபையும் இடப்புறம் சிற்சபையும், பஞ்சபூதங்களைக் குறிக்கும் ஐந்து படி களையும் காணலாம். அவற்றைக் கடந்து உள்ளே சென்றால், சதுர வடிவ பீடத்தின் மேல் வள்ளலார் ஏற்றி வைத்த அணையா தீபமும், அதற்குப் பின்னே 6.9 அடி உயரமும், 4.2 அடி அகலமும் கொண்ட நிலைக் கண்ணாடியையும் காணலாம். கண்ணாடியை மறைக்கும் வண்ணம் ஏழு நிறங்களைக் கொண்ட ஏழு திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இந்தத் திரைகளை விலக்கி, கண்ணாடி யில் தெரியும் தீபத்தை தரிசிப்பதே ‘ஜோதி தரிசனம்’ எனப்படு கிறது.

இந்த ஜோதி தரிசனத்தை 1872-ம் ஆண்டு தைப்பூசத்தன்று சத்தியஞான சபையில் வள்ள லார் தொடங்கி வைத்தார். அது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தன்று மட்டுமே ஏழு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனத்தை காணலாம். மற்ற மாதங்களில் வரும் பூச நட்சத்திர நாளன்று ஆறு திரைகள் மட்டுமே விலக்கப்படும்.

ஏழு திரைகளின் தத்துவங்கள்

ஏழு வண்ணத் திரைகளுக்கும் முறையே ஒவ்வொரு தத்துவங்கள் உள்ளன. கருப்புத்திரை- மாயையை விலக்கும் (அசுத்த மாயா சக்தி), நீலத்திரை - உயர்ந்த நோக்கத்துக்கு ஏற்படும் தடையை விலக்கும் (சுத்த மாயா சக்தி), பச்சைத்திரை - உயிர்களிடம் அன்பு, கருணையை உண்டாக்கும் (கிரியா சக்தி), சிவப்புத் திரை - உணர்வுகளைச் சீராக்கும் (பரா சக்தி), பொன்னிறத்திரை - ஆசைகளால் ஏற்படும் தீமைகளை விலக்கும் (இச்சா சக்தி), வெள்ளைத் திரை - மாயைகளை விலக்கி இறை நிலையை உணரச் செய்யும் (ஞான சக்தி). இந்த ஆறு வண்ணங்களும் இணைந்த ஏழாவது திரை - உலக மாயைகளை விலக்கும் (ஆதி சக்தி).

மக்களின் ‘அறியாமை’ என்னும் திரை விலகி ஞானம் பெறவே வடலூர் சத்தியஞான சபையில் தைப் பூச தினத்தன்று 7 திரைகள் விலக்கப்படுகின்றன.

எளிய மக்கள் பசியைப் போக்க சத்திய ஞானசபை அருகிலேயே தர்ம சாலையை நிறுவினார் வள்ளலார். இந்த தர்ம சாலையில் அடுப்பு அணையாமல் அன்று முதல் இன்றுவரை மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

புலால் உணவு உண்ணக் கூடாது, எந்த உயிரையும் கொல்லக் கூடாது; சாதி, மதம், இனம், மொழி முதலான வேறுபாடு கூடாது; எதிலும் பொது நோக்கம் வேண்டும், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்; வழிபாட்டின் பெயரால் பலி இடுதல் கூடாது, உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது, மதவெறி கூடாது என்பது வள்ளலாரின் கொள்கைகளாகும்.

கேள்விகளால் தேடல் வேள்வி

நாம் யார்?, நம் நிலை எப்படி பட்டது?, கடவுள் நிலை என்ன?, நாம் கடவுளை விரைந்து எவ்வாறு அடைவது?, எங்ஙனம் அழியாத தேகத்தைப் பெற்று நித்திய வாழ்வு பெறலாம்? ஆகிய மேற்கண்ட கேள்விகளுக்கான வழிகளை ஆராய்ந்து கண்டறிந்து, தாம் கண்டடைந்த வழியை எல்லோரும் பெறுவதற்காக வள்ளலார் பெருமானால் ஏற்படுத்தப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும்.

இப்படி வாழ்ந்த வள்ளலார் வடலூர் அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்றார். இது, ஒவ்வொரு வருடமும் தை மாதம் பூச நட்சத்திரத்தன்று தைப் பூச திருவிழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்நன்னாளாகிய தைப் பூசத் தினத்தன்று வடலூர் சத்திய ஞானசபையில் ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.

மனித உடல், அணுக்களால் ஆனது. இதில் நிறைந்திருக்கும் ஆன்மா என்னும் பிரகாசத்தை மாயா சக்திகளான 7 திரைகள் மறைக்கின்றன. அந்த திரைகளை நீக்கினால் நாம் முழுமையான ஞானம் பெற முடியும். இந்த தத்துவத்தைத்தான் ஞானசபையில் 7 திரைகளை நீக்கிய பின், ஜோதியை தரிசிக்கும் நிகழ்ச்சி உணர்த்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x