Last Updated : 31 Dec, 2023 05:06 PM

 

Published : 31 Dec 2023 05:06 PM
Last Updated : 31 Dec 2023 05:06 PM

புதுச்சேரி | அனுமதிக்கப்படாத பகுதிகளில் சுற்றுலா படகுகளை இயக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்

புதுச்சேரியில் பெரியாறு பகுதியில் கட்டுமரங்களை கடலின் குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்

புதுச்சேரி: சுற்றுலா படகுகளினால் மீன்பிடித்தொழில் பாதிப்பதாகக் கூறி கட்டுமரங்களை நிறுத்தி வலைகளை வீசி புதுச்சேரியில் மீனவர்கள் திடீர் போராட்டத்தை இன்று நடத்தினர்.

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல், ஆற்றின் முகத்துவாரத்தில் படகு பயணம் செய்வதை விரும்புகின்றனர். இதையடுத்து புதுவை அரசின் சுற்றுலாத்துறை மூலம் ஆற்றுப்பகுதியில் படகுகளை இயக்க சில நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அனுமதி பெறாமல் 100-க்கும் மேற்பட்ட படகுகள் சுற்றுலா பயணிகளுக்காக பாதுகாப்பின்றி இயக்கப்பட்டன. அண்மையில் சென்னையிலிருந்து வந்த ஒரு தம்பதி முகத்துவாரத்தில் விழுந்து காயமடைந்தனர். இதையடுத்து பாதுகாப்பு கருதி சுற்றுலா படகுகள் இயக்குவதை அரசு தடை செய்தது. முறையாக அனுமதி பெற்று, பாதுகாப்புடன் படகுகளை இயக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி புதுச்சேரியில் 300-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா படகு இயக்க அனுமதி கோரினர். அனுபவம் கொண்ட 8 நிறுவனங்களுக்கு அரசு அனுமதியளித்தது.

இந்தநிலையில் புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர். அவர்களில் பலர் கடலில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். இந்த படகுகள் துறைமுக பகுதியிலிருந்து இயக்கப்படுகின்றன. இதனால், மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதாகக் கூறி, சுற்றுலா படகுகள் இயக்கப்படுவதைக் கண்டித்து புதுவை மீனவர்கள் இன்று திடீர் போராட்டத்தில் இறங்கினர். துறைமுகத்தை நோக்கி வரும் பெரியாறு பகுதியில் கட்டுமரங்களை கடலின் குறுக்கே நிறுத்தி வலை வீசி போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, "சுண்ணாம்பாறு படகு குழாம் முழுமையாக சுற்றுலாவுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது பெரியாறு பகுதியில் படகுகள் இயக்கப்படுவதால் மீன்வளம் பாதிக்கப்படும். இறால் முட்டைகள், மீன் குஞ்சுகள் அழிந்து வருகின்றன. இதனால் கடல் வளமும், ஆற்று வளமும் பாதிக்கப்படுகிறது. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து விசைப்படகு மீனவர்களுடன் ஒருங்கிணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x