Published : 29 Dec 2023 06:34 AM
Last Updated : 29 Dec 2023 06:34 AM

‘பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல் விஜயகாந்த்’ - மத்திய அமைச்சர்கள், தேசிய தலைவர்கள் இரங்கல்

சென்னை: விஜயகாந்த் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி:

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா: தேமுதிக தலைவரும், தமிழ் திரையுலகில் மூத்த நடிகருமான விஜயகாந்த் மறைவு குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். ‘கேப்டன்’ என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் தனது கதாபாத்திரங்கள் மூலம் மக்களிடையே தேசபக்தியை தூண்டினார். அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி சாந்தி.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். ‘பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ என அவருக்கு அஞ்சலி செலுத்துவோம். அவரை இழந்து வாடும் தேமுதிக தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: மூத்த அரசியல் தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், எண்ணற்ற ரசிகர்களுக்கு அனுதாபங்கள்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா: திரைத்துறையிலும், பொது சேவையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு, இத்துறைகளில் குறிப்பிடத்தக்க முத்திரையை பதித்தவர் விஜயகாந்த். மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான அவரது நேர்மையான அர்ப்பணிப்புக்காக அவர் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: மக்களால் மிகவும் போற்றப்பட்ட தலைவர் விஜயகாந்த். தமிழகத்தின் சமூக, அரசியல் அதிகாரத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி: திரைத்துறை, அரசியலுக்கு விஜயகாந்த் ஆற்றிய பங்களிப்பு பல கோடி மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி: சிறந்த கலைஞன், மக்களின் கதாநாயகன், தூய இதயம் கொண்ட மனிதன் கேப்டன் விஜயகாந்த், எப்போதும் மரியாதையுடன் போற்றப்படுவார். அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு ஆழ்ந்த இரங்கல்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: தமிழக மக்களால் அன்போடு ‘கேப்டன்’ என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். அவரை இழந்து வாடும், குடும்பத்தினர், தேமுதிக தொண்டர்கள், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு: மூத்த நடிகர், அரசியல் தலைவர் விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x