Published : 14 Jan 2018 01:19 PM
Last Updated : 14 Jan 2018 01:19 PM

நாதுராம் கைது செய்யப்பட்டது எப்படி? 13 கிலோ மீட்டர் கார் சேஸிங், துப்பாக்கி சூடு, சினிமாவை விஞ்சிய காட்சிகள்

சினிமா காட்சிகள் போல், பலகிலோ மீட்டர் கார் சேஸிங், துப்பாக்கி சண்டை என போராடி நாதுராமை போலீஸார் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது. கொள்ளையன் நாதுராம் கூட்டாளியுடன் பிடிபட்டது குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை கொளத்தூரில் முகேஷ்குமார் எனபவரின் நகைக்கடையில் 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி ரொக்கப் பணம் ரூ.2 லட்சம் கொள்ளை போனது. மேற்கூரையில் துளையிட்டு திருடப்பட்ட இந்த வழக்கில் 4 வடமாநில ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். நாதுராம் மற்றும் அவரது கூட்டாளி தினேஷ் சௌத்ரி ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றனர்.

இதில் நாதுராமுக்கு ராஜஸ்தான் பாலி மாவட்டத்தில் மிகுந்த அரசியல் செல்வாக்கு உண்டு. அங்குள்ள உயர் சாதி வகுப்பைச் சேர்ந்த நாதுராமுக்கு கொள்ளை அடிப்பதே பிழைப்பு. அவர்கள் இருவரை பிடிக்கச் சென்ற தனிப்படையினர் நாதுராமின் தந்தை உறவினர்கள் உள்ளிட்டோரை பிடித்து வந்தனர்.

பின்னர் கடந்த டிசம்பர் 8-ம் தேதி பெரிய பாண்டியன், முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை நாதுராமையும் தினேஷ் சௌத்ரியையும் பிடிக்க ராஜஸ்தான் சென்றது. அப்போது ஏற்பட்ட மோதலில் பெரிய பாண்டியன் கொல்லப்பட்டார். அது இன்ஸ்பெக்டர் முனிசேகர் துப்பாக்கியிலிருந்து வந்த குண்டு என்று பாலி மாவட்ட எஸ்பி உள்ளிடோர் சொன்னாலும், பெரிய பாண்டியன் உடலில் பாய்ந்த குண்டு இதுவரை கண்டு பிடிக்கப்படாததால் யார் பெரிய பாண்டியனை சுட்டது என்பதில் இதுவரை குழப்பம் நீடிக்கிறது.

இந்த வழக்கில் பெரிய பாண்டியனை நாதுராம் தான் சுட்டார் என முனிசேகர் புகார் அளித்திருந்தார். சுட்டுவிட்டு நாதுராமும் உடன் இருந்தவர்களும் தப்பிச் சென்றனர். இதுவரை நாதுராம் பிடிபடவில்லை. தினேஷ் சௌத்ரி பிடிபட்டார் அவர் ராஜஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை சென்னைக்கு அவரை அழைத்துவரவில்லை.

தலைமறைவாக இருக்கும் நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் போலீஸார், தமிழக போலீஸார் தனித்தனியே முயற்சி எடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்தவாரம்முகநூலில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் படத்தை நாதுராம் போட்டது பரபரப்பானது. நாதுராம் ஜாட் என்ற பெயரில் முகநூலில் கணக்கு வைத்துள்ள நாதுராம், தனது தொழிலாக கிரிமினல் செட்டில்மென்ட் என்று கட்டப்பஞ்சாயத்தையும் ஒரு தொழிலாக குறிப்பிட்டுள்ளார்.

இது ராஜஸ்தான் போலீஸாரின் கவனத்திற்கு கொண்டுச்செல்லப்பட்டது. உடனடியாக சைபர் பிரிவு போலீஸார் நாதுராமின் செல்போன் டவரை தீவிரமாக கண்காணிக்க துவங்கினர்.

போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் நாதுராம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பதுங்கி இருந்ததை செல்போன் டவர் மூலம் ராஜஸ்தான் போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் நாதுராமின் நடமாட்டத்தை அங்குலம் அங்குலமாக கண்காணித்த ராஜஸ்தான் போலீஸார், பாலி எஸ்பி தீபக் பார்கவ் தலைமையில் குஜ்ராத் மாநிலத்துக்கு சென்றனர்.

ராஜ்கோட்டுக்கு சென்ற போலீஸார் அவனை நெருங்கும் போது நாதுராம் தன் கையில் இருந்த துப்பாக்கியால் போலீஸாரை நோக்கி சுட்டுவிட்டு, காரில் ஏறி தப்பிச்சென்றார். இதையடுத்து நாதுராமின் காரை போலீஸார் துரத்திச் சென்றனர். காரை தொடர்ந்து சென்ற போலீஸார் காரை நோக்கி 3 ரவுண்டு சுட்டனர். இதனால் காரின் டயர் பஞ்சராகி நின்றது.

கார் டயர் பஞ்சர் ஆனதால் காரைவிட்டு கீழே இறங்கி நாதுராம் ஓட ஆரம்பித்துள்ளார், போலீஸாரும் பின்னால் விரட்டிச் சென்றனர். பாட்கோத்ரா என்ற இடத்தில் உள்ள சுங்க சாவடி அருகே மேற்கொண்டு ஓட முடியாமல் நாதுராம் தயங்கி நிற்க நாதுராம் மற்றும் உடனிருந்த கூட்டாளி சுரேஷ் மேகுவால் இருவரையும் போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

நாதுராமை கைது செய்ய ராஜஸ்தான் போலீசார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு நாதுராமை விரட்டிச் சென்றனர். சினிமாவில் வருவது போல் துப்பாக்கி சூடு கார் சேஸிங், பின்னர் துரத்தி பிடித்தல் என 13 கிலோ மீட்டர் தூரம் நாதுராம் போக்கு காட்டியுள்ளார்.

போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொல்லப்பட்ட பிறகு பாலி மாவட்டத்தில் இருந்து தப்பி தலைமறைவாக இருந்த நாதுராம் 33 முறை தனது இருப்பிடங்களை மாற்றியுள்ளார் என ராஜஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் போலீஸாரையே துப்பாக்கியை காட்டி, சுட்டுவிட்டு தப்பிச்சென்ற நாதுராம் நள்ளிரவில் ஏன் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை சுட்டுவிட்டு தப்பியிருக்க கூடாது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x