Published : 25 Jan 2018 10:43 AM
Last Updated : 25 Jan 2018 10:43 AM

சவுக்கு மரம் எடுத்ததில் தகராறு: வாளால் வெட்டியதில் இளைஞர் பலி

சிவகங்கை மாவட்டம், பூவந்தியில் சவுக்கு மரம் எடுத்ததில் ஏற்பட்ட தகராறில் சகோதரியை அடித்தவர்களை வாளால் வெட்டியதில் மகன் உயிரிழந்தார். அவரது பெற்றோர் காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பூவந்தியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (48), இவரது மனைவி தாமரை (42). இவர்களது மகன் அவினாஷ் (19). இதே ஊரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வம் மனைவி ரஞ்சிதம்.

இவர்கள் இடையே பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுவர் அருகே கிடந்த சவுக்குமரத்தை எடுத்ததில் தகராறு ஏற்பட்டுள்ளது.

சவுக்கு மரத்தை தாமரை எடுத்து அவரது வீட்டில் வைத்துள்ளார். அவரது வீட்டுக்கு சென்ற ரஞ்சிதம், தான் எடுத்து வைத்த மரத்தை தருமாறு கேட்டுள்ளார்.

இதில் ரஞ்சிதத்துக்கும், தாமரைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டிலிருந்த தாமரை, மகன் அவினாஷ் ஆகியோர் சேர்ந்து தாக்கினராம். இதுகுறித்து பூவந்தி போலீஸில் ரஞ்சிதம் புகார் செய்தார். இதுதொடர்பாக ரஞ்சிதம், மேலூரில் உள்ள தனது சகோதரர் முருகனிடம் போனில் புகார் தெரிவித்துள்ளார்.

உடனடியாக வந்த முருகன், ஆறுமுகம் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். இதில் முருகன் வைத்திருந்த வாளால் அவினாஷ் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அப்போது, தடுக்க வந்த ஆறுமுகத்தை வெட்டியதில் பலத்த காயமடைந்தார். அவரது மனைவி தாமரைக்கும் காயம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தாமரை அளித்த புகாரின்பேரில் முருகன் (27), உறவினர் செல்வி (37), பூமா (32), முருகன் சகோதரி ரஞ்சிதம் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்தனர். இதில் முருகன், செல்வி, பூமா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் முருகனின் மனைவி பூரணம்மாள் மதுரை கீழவளவு காவல்நிலையத்தில் போலீஸாக உள்ளார்.

போலீஸார் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தால் இக்கொலைச் சம்பவம் நடந்திருக்காது என பூவந்தி கிராமத்தினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x