Published : 22 Dec 2023 05:22 PM
Last Updated : 22 Dec 2023 05:22 PM

கவுதம சிகாமணிக்கு எதிரான வழக்கு: குற்றச்சாட்டுப் பதிவுக்காக ஜன.4-க்கு ஒத்திவைப்பு

கவுதம சிகாமணி | கோப்புப்படம்

சென்னை: கள்ளக்குறிச்சி எம்.பி. கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கை குற்றச்சாட்டுப் பதிவுக்காக ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து 12-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006- 2011 திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத் துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, அவரது மகனும், தற்போதைய கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.,யுமான கவுதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாத், கோதகுமார், சதானந்தன், லோகநாதன் உள்ளிட்டோர் செம்மண் குவாரிகளில் சட்டவிரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ல் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் லோகநாதன் மட்டும் இறந்துவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கின் அடிப்படையில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் திமுக எம்.பி, கவுதமசிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் பொன்முடி மற்றும் அவருடைய மகன் கவுதம சிகாமணி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் திமுக எம்.பி. கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகை எண்ணிடப்பட்டு, கோப்புகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், வழக்கை 12-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கை குற்றச்சாட்டுகள் பதிவுக்காக நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி மலர் வாலண்டினா முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கவுதம சிகாமணி ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் வழக்கு விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கை வரும் ஜனவரி 4-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். மேலும், அன்றைய தினம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். எனவே, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் குற்றச்சாட்டு பதிவுக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x