Last Updated : 20 Dec, 2023 12:17 PM

1  

Published : 20 Dec 2023 12:17 PM
Last Updated : 20 Dec 2023 12:17 PM

லஞ்ச வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை: சொத்துக் குவிப்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க அரசு மருத்துவரிடம் லஞ்ச வாங்கிய வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மதுரை அமலாக்கத் துறை மண்டல துணை அதிகாரி, அங்கித் திவாரி ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதிடுகையில், "அங்கித் திவாரி உரிய ஆதாரங்களோடு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பல அமலாக்கத் துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. அங்கித் திவாரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் மட்டுமே லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மேலும் பல அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தொடர்புள்ளது கண்டறியப்படும்.

அங்கித் திவாரி மடிக்கணினியில் இருந்து முக்கியமான ஆவணம் சிக்கி உள்ளது. அதில், தமிழகத்தில் லஞ்ச வழக்குகளில் சிக்கி உள்ள 75 பேரை பெயருடன் பட்டியலிட்டுள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. வழக்குகள் நிலுவையில் உள்ள பலரை மிரட்டி பணம் பெற்றுள்ளதாக அங்கித் திவாரியே தெரிவித்துள்ளார். அங்கித் திவாரி திண்டுக்கல் அரசு மருத்துவர் மீது வழக்கு இல்லை என குறிப்பிட்டு ஜாமீன் கோருகிறார். ஆனால் திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மற்றும் அவரது மனைவி மீது மதுரை மண்டல அலுவலகத்தில் வழக்கு உள்ளது.

20 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மேலும் 20 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட வேண்டி உள்ளது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், அவர் வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காரில் அங்கித் திவாரி பணம் பெறும் போது அவருடைய குரல் பதிவு மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை உண்மையா என்பதை கண்டறிய அவருடைய குரலை பதிவு செய்து ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும். அவரை பாதுகாக்க அமலாக்கத் துறை அதிகாரிகள் முயல்கின்றனர். திவாரி கைது செய்யப்படும் வரை அவர் மீது அமலாக்கத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். மேலும் இந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை செய்ய முழு அதிகாரம் உள்ளது, விசாரணையை தொடரலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே ஜாமீன் வழங்கக் கூடாது. மனுவை ரத்து செய்ய வேண்டும்" என்றார்.

அங்கித் திவாரி தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர், "அங்கித் திவாரி மீது ஏற்கனவே எந்த வழக்கும் இல்லை. அவர் மீது வழக்கு புனையப்பட்டுள்ளது. பொய்யான குற்றச்சாட்டு அடிப்படையில் திட்டமிட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மத்திய அரசு அதிகாரி என்பதால் வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் அடுத்து தீர்ப்புக்காக வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அங்கித் திவாரியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சிவஞானம் உத்தரவு பிறப்பித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x