Published : 19 Dec 2023 05:30 AM
Last Updated : 19 Dec 2023 05:30 AM

ரயிலில் சிக்கிய 500 பயணிகள் ஸ்ரீவைகுண்டத்தில் தவிப்பு

சென்னை: ஸ்ரீவைகுண்டத்தில், கனமழை காரணமாக சென்னை நோக்கி வந்த ரயிலில் 500 பயணிகள் சிக்கி தவித்து வருகின்றனர்.

தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.25 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு 800 பயணிகளுடன் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. மழை வெள்ளம் கரை காரணமாக இந்த ரயிலானது ஸ்ரீவைகுண்டத்தில் அன்று இரவு 9.19 மணிக்கு நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று முதல்கட்டமாக 300 பயணிகள் மீட்கப்பட்டு 4 பேருந்துகள் மற்றும் 2 வேன்கள் மூலம் அருகில் உள்ள அரசு பள்ளியில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இந்த வழித்தடத்தில் உள்ள சாலையில் உடைப்பு ஏற்பட்டதால் மீதமுள்ள 500 பயணிகளை மீட்க முடியாத சூழல் நிலவி வருகிறது. பள்ளியில் தங்க வைக்கப்பட்ட 300 பயணிகளுக்கு உணவு, குடிநீர் போன்ற தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. ரயிலில் சிக்கியுள்ள 500 பயணிகளுக்கு சாலை மார்க்கமாக உணவு கொடுக்க வழியில்லாததால் ஹெலிகாப்டர் மூலம் உணவு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாலை போக்குவரத்து துண்டிப்பு காரணமாக பயணிகளை வெளியேற்றுவதில் சிரமம் நீடிக்கிறது. இதையடுத்து இன்று(டிச.19) மீதமுள்ள பயணிகளை அனைவரையும் மீட்டு சாலை வாகனங்கள் மூலம் அருகில் உள்ள பெரிய ரயில் நிலையங்களுக்கு அழைத்து சென்று, அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாட்ஸ்அப் எண் அறிவிப்பு: கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து சமூக வலைதளம் மூலம் தமிழக அரசின் வாட்ஸ்அப் எண்: 81485 39914 மற்றும் “http://twitter.com/tn_rescuerelief (Username - @tn_rescuerelief) என்ற எக்ஸ் தளத்தில் தகவல் தெரிவிக்கலாம். நிவாரணப் பொருள் வழங்க விரும்புவோர் 73977 66651 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x