Published : 24 Jan 2018 10:31 AM
Last Updated : 24 Jan 2018 10:31 AM

பொள்ளாச்சி அருகே சேத்துமடை கிராமத்தில் விவசாய நிலத்துக்குள் புகுந்த ஒற்றை யானை: 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் விரட்டப்பட்டது

பொள்ளாச்சி அருகே மலையடிவார கிராமமான சேத்துமடையில், விளைநிலங்களுக்குள் ஒற்றை யானை புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட, சேத்துமடை கிராமத்தில் இரு கும்கி யானைகளுடன் சில நாட்கள் முகாமிட்டு வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இதனால், விளைநிலங்களுக்குள் வருவதை ஒற்றை யானை தவிர்த்தது. இதைத்தொடர்ந்து, கும்கி யானைகள் மீண்டும் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில், நேற்று காலை 8 மணியளவில், சேத்துமடை மணக்கடவு அம்மன் கோயில் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த ஒற்றை யானை, சர்க்கார்பதி சாலையிலுள்ள தனியார் ஒருவரின் தோட்டத்துக்குள் புகுந்து நகராமல் நின்றது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தனர்.

வனவர் மணிகண்டன் தலைமையில் வனக் காப்பாளர் அஷ்ரப் அலி, சுரேஷ் மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் அடங்கிய 15 பேர் கொண்ட குழுவினர் பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு, பழைய சர்க்கார்பதி பகுதியிலுள்ள வகிறியாற்றின் வழியாக வனப்பகுதிக்குள் ஒற்றை யானை விரட்டப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x