Published : 14 Dec 2023 08:02 AM
Last Updated : 14 Dec 2023 08:02 AM

முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையிலான பிரச்சினையில் நீதிமன்றம் தலையிட ஆளுநர் எதிர்பார்ப்பது ஏன்? - நீதிபதி கருத்து

புதுடெல்லி: நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் தமிழக முதல்வருக்கும், ஆளுநருக்கும் இடையிலான இந்த பிரச்சினையில் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என ஆளுநர் எதிர்பார்ப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், இருவருக்குமிடையே பரஸ்பரம் சுமுக உறவு இருந்தால் தான் தீர்வு ஏற்படும் என அறிவுறுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்ட மசோதாக்கள், அரசின் கொள்கை முடிவுகள் உள்ளிட்ட கோப்புகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டு வைத்துள்ளதாகவும், எனவே ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பை நிர்ணயம் செய்யக்கோரியும் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக முதல்வரை அழைத்துப்பேசி ஆளுநர் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்ததன் எதிரொலியாக ஆளுநர் கிடப்பில் கிடந்த 10 சட்ட மசோதாக்களை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்தார். அந்த மசோதாக்களை மீண்டும் மறுநிறைவேற்றம் செய்த தமிழக அரசு அவற்றை மீண்டும் இரண்டாவது முறையாக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அந்த மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவையி்ல் மறுநிறைவேற்றம் செய்து ஆளுநருக்கு இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுத்து ஒப்புதல் அளித்து இருக்க வேண்டும். அவற்றை குடியரசுத் தலைவருக்கு அவசரம் அவசரமாக பரிந்துரை செய்திருப்பது சட்ட விரோதமானது. ஏற்புடையதும் அல்ல.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு அறிவுறுத்தல்களை வழங்கிய பிறகும் ஆளுநரின் இந்த நடவடிக்கையை எப்படி எடுத்துக்கொள்வது, எனவே இந்த மசோதாக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டு இருந்தது.இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கருத்து தெரிவித்ததாவது: நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தமிழக முதல்வருக்கும், ஆளுநருக்கும் இடையிலான இந்த பிரச்சினையில் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என ஆளுநர் எதிர் பார்ப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.பின்னர் இருவருக்குமிடையே பரஸ்பரம் சுமுக உறவு இருந்தால் தான் தீர்வு கிடைக்கும்.

ஆளுநர் தரப்பில் இருந்து சில முன்னேற்றங்களை எதிர்பார்க்கிறோம். எல்லாவற்றையும் நீதிமன்றமே சொல்லிக் கொண்டிருக்க முடியாது. முதல்வரும், ஆளுநரும் சந்தித்துப்பேசி இந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மீண்டும் அறிவுறுத்துகிறோம். இவ்வாறு தெரிவித்தார். அப்போது இந்த விவகாரத்தில் ஆளுநரை சந்தித்துப்பேச தமிழக முதல்வர் தயாராக இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்பதால் இதை அட்டர்னி ஜெனரல் கவனத்துக்கு விட்டுவிடுகிறோம் எனக்கூறி விசாரணையை ஜனவரி 3-வது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

ஆளுநர் திடீர் அழைப்பு: இந்த வழக்கு விசாரணைக்கு இடையே நேற்று தமிழக ஆளுநர் கிடப்பில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக கலந்து ஆலோசனை நடத்த திடீரென தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் தற்போது மி்க்ஜாம் புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய குழு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் பார்வையிட்டு ஆலோசனை நடத்தி வருவதால் அந்தக்குழு சென்றதும் ஆளுநரை முதல்வர் சந்திக்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x