Published : 10 Dec 2023 06:51 AM
Last Updated : 10 Dec 2023 06:51 AM

அனைத்து மக்களின் உரிமைகளை மதிப்போம்: ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: உலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி: உலக மனித உரிமைகள் நாளில் அனைவருக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாளில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான நமது பொறுப்பை உணர்ந்து, அனைத்து மக்களின் உரிமைகளையும் மதிப்போம் என மீண்டும் உறுதியேற்போம். மனித உரிமைகளை மதிப்பதே நற்சமூகத்தின் வேராகும். ஆனால் நமக்கோ மனித உரிமை என்பது ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற நமது தேசிய நெறியின் சாராம்சமாகும். மனித உரிமைகளுக்கான நமதுஅர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்து, அனைவரையும் உள்ளடக்கிய, அமைதியான, இரக்கமுள்ள உலகத்தை உருவாக்குவோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: மனிதனை மனிதனாக மதித்திட வேண்டும் எனும் மனிதநேய உணர்வை வளர்த்திடும் நோக்கில் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் நாள்,உலக நாடுகளால், “உலக மனிதஉரிமை நாள்” என்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 75-வது ஆண்டு ஆகும்.

அவ்வகையில் ‘அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும்நீதி’ என்பதை இந்த ஆண்டுக்கான மனித உரிமைகள் நாள் கருப்பொருளாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 1948-ம் ஆண்டு டிச.10-ம் நாள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்று வெளியிட்டது. அப்பிரகடனத்தை ஏற்றுக்கொள்வதில் முக்கியப் பங்காற்றிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதைத்தொடர்ந்து இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்புச்சட்டம் 28.9.1993 அன்று நிறைவேற்றப்பட்டது.

அச்சட்டப்படி, இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழகத்தில்தான் திமுக அரசு, மனிதஉரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும்நிகழக்கூடாது எனும் எண்ணத்துடன் 17.4.1997 அன்று ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் தலைமையில், “தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்” எனும் புதிய அமைப்பை ஏற்படுத்தியது. இந்த ஆணையம் தொடங்கப்பட்டது முதல் செப். 2023 வரை இந்த ஆணையத்துக்கு வரப்பெற்ற 2 லட்சத்து 60 ஆயிரத்து 55 முறையீடுகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 2 லட்சத்து 17 ஆயிரத்து 918 முறையீடுகள் மீது தீர்வு கண்டு, ஆணை பிறப்பித்து நலிந்தவர்களின் நலன் காக்கும் பணிகளை செய்து வருகிறது.

எந்த இடத்தில், எவர், எதனால் பாதிக்கப்படுகிறார்களோ, அந்த இடத்துக்கு, உடனே விரைந்து சென்று அவருக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அவரை விடுவித்துக் காப்பாற்றும் இதயம் கொண்டது இந்த அரசு. மாமல்லபுரம் அருகில் பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு நரிக்குறவர் சமுதாயப் பெண்ணும், அவரது குழந்தையும் அப்பகுதியில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்குகொள்ளச் சென்றபோது, சிலர்அவர்களைத் தடுத்துத் திருப்பி அனுப்பிய செய்திகேட்டு, அறநிலையத் துறை அமைச்சர் மூலம்அவர்களை விருந்தில் பங்குபெறச் செய்ததுடன். பூஞ்சேரியில் உள்ள அந்தப் பெண்ணின் இல்லம் சென்று,அவருக்கு ஆறுதல் கூறியது இந்தஅரசு. அத்துடன், அப்பகுதி வாழ் நரிக்குறவர் மற்றும் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த 282 பேருக்குஇலவச வீட்டுமனைப் பட்டாக்கள் உட்பட பல நலத்திட்ட உதவிகள்வழங்கி அவர்களைப் பெருமைப்படுத்தியதும் இந்த அரசுதான்.

அதேபோல, மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சலுகை வழங்கியதுடன் 2023 செப்.15-ல் அண்ணா பிறந்தநாளில் மாதம் தோறும் ரூ.1,000வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைத் தொடங்கிவைத்து, இது உதவித் தொகையல்ல, உரிமைத்தொகை என்று கூறி மகளிர் சமுதாய உரிமையைப் போற்றி, நலிந்தவர் நலம் காக்கும் நல்ல அரசாகத் திகழ்கிறது.

இந்த உணர்வோடு, மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும்நடைபெறாமல் முற்றிலும் தடுப்போம். அதற்கு உறுதுணையாக ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் செயல்படுவோம். மண்ணில் மனிதம் காப்போம் என அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x