Published : 09 Dec 2023 05:22 PM
Last Updated : 09 Dec 2023 05:22 PM

‘மிக்ஜாம்’ பாதிப்பு | முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி வழங்கியது அசோக் லேலண்ட் நிறுவனம்

சென்னை: மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக அசோக் லேலண்ட் நிறுவனம் ரூ.3 கோடி நிதி வழங்கியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.3 கோடிக்கான காசோலையை அசோக் லேலண்ட் நிறுவன மேலாண்மை இயக்குநர் இன்று வழங்கினார்.

மேலும், பி.எஸ்.ஜி. குழுமத்தின் லீப் கிரீன் எனர்ஜி லிமிட்டட் நிறுவனம் சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலை முதல்வரிடம் வழங்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகையான 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இன்று வழங்கினார்.

டிவிஎஸ் குழுமம் ரூ.3 கோடி நிதி: ‘மிக்ஜாம்’ புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடியை, முதல்வர் ஸ்டாலினிடம் வெள்ளிக்கிழமை டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன் வழங்கினார்.

முதல்வர் பொது நிவாரண நிதி... - ‘மிக்ஜாம்’ மீட்பு - நிவாரணப் பணிகளுக்காக அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு 80 (G)-ன் கீழ் முழு வரிவிலக்கு உண்டு. வெளிநாடுவாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்துக்கும் விலக்களிக்கப்படும். இந்த நன்கொடைகளை மின்னணு முறை மூலம் வங்கி இணைய சேவைஅல்லது கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் https://cmprf.tn.gov.in என்ற இணையதளம் வழியாக செலுத்தி பற்றுச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம். இது துவிர இசிஎஸ், ஆர்டிஜிஎஸ், என்இஎஃப்டி மூலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமைச்செயலக கிளைக்கு, 117201000000070 என்ற சேமிப்பு கணக்குக்கு அனுப்பலாம். இந்த வங்கியின் ஐஎஃப்எஸ்சி கோடு - IOBA0001172, எம்ஐசிஆர் கோடு - 600020061, CMPRF பான் எண் - AAAGC0038F ஆகும்.

இதுதவிர, யுபிஐ (‘tncmprf@iob’) மூலம் செலுத்தலாம். மேலும், போன்பே, கூகுள்பே, பேடிஎம், அமேசான்பே, மொபிக்விக் போன்றசெயலிகள் வாயிலாகவும் செலுத்தலாம். இவ்வாறு இசிஎஸ் மூலம் நிதி அனுப்புவோர், தங்கள் பெயர், செலுத்தும் தொகை, வங்கி மற்றும் கிளை, செலுத்தப்பட்ட தேதி, நிதிஅனுப்பியதற்கான எண், தங்கள் முழுமையான முகவரி, மின்னஞ்சல் விவரம், தொலைபேசி அல்லது கைபேசி எண்ணை தெரிவிக்க வேண்டும்.

நிவாரண நிதி வழங்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ‘IOBAINBB001 Indian Overseas Bank,Central Office, Chennai’ என்ற ஸ்விப்ட் குறியீட்டை பயன்படுத்த வேண்டும். குறுக்குக் கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக, “முதலமைச்சரின் பொது நிவாரண நிதி (Chief Minister’s Public Relief Fund)” என்ற பெயரில், ‘அரசு இணைச் செயலாளர் மற்றும் பொருளாளர், முதலமைச்சர் பொது நிவாரண நிதி, நிதித் துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009, தமிழ்நாடு, இந்தியா என்ற முகவரிக்கு அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரி jscmprf@tn.gov.in ஆகும்.

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள் தவிர, நிறுவனங்களின் சமூகப் பொறுப்பின் கீழ் பேரிடர் நிவாரணத்துக்காக நிதியுதவி வழங்கும் நிறுவனங்கள், மாநிலப் பேரிடர் மேலாண்மை அமைப்பின், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமைச்செயலக கிளையில் உள்ள கணக்கான 117201000017908-ல் செலுத்தலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x