

வேலூர்: ‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக வேலூரில் இருந்து ஆற்காடு வரை இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் 16 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. வேலூரில் இருந்து ஆற்காடு வரை இயக்கப்படும் பேருந்துகளில் 16 ரூபாய் கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது. அரசுப் பேருந்துகளில் முறையான கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் வேலூரில் இருந்து ஆற்காடு வரை இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கூடுதல் கட்டணம் ஏன்? வசூலிக்கிறீர்கள் என கேட்கும் பயணிகளை ‘இஷ்டம் இருந்தால் ஏறு, இல்லாவிட்டால் இறங்கு’ என மிரட்டும் வகையில் நடத்துநர்கள் பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், 20 ரூபாய் கட்டணம் என்பது வேலூரில் ஆற்காடு வழியாக வாலாஜா பேருந்து நிலையம் வரை ஆகும்.
இந்து குற்றச்சாட்டுகள் தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ ‘உங்கள் குரல்’ பகுதியில் முரளி என்ற வாசகர் புகார் தெரிவித்திருந்தார். அதன்பேரில் கடந்த திங்கட்கிழமை விரிவான செய்தி மற்றும் படம் வெளியான நிலையில் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதற்கிடையில், வேலூர்-ஆற்காடு வரை அரசு நிர்ணயித்த கட்டணமாக 16 ரூபாயை பயணிகளிடம் வசூலிக்க தொடங்கியுள்ளனர். ‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியால் அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிப்பதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.