Published : 23 Jan 2018 05:10 PM
Last Updated : 23 Jan 2018 05:10 PM

பள்ளிக்கரணையில் பயங்கரம்; குடும்பத்தகராறில் காணாமல் போன கணவன்: மனமுடைந்த மனைவி இரண்டு குழந்தைகளை கொன்று தற்கொலை

பள்ளிக்கரணை அருகே மனைவியுடன் ஏற்பட்ட மனத்தாங்களில் கணவன் காணாமல் போனதால் மனமுடைந்த பெண் தனது 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.

வேளச்சேரியை அடுத்த பள்ளிக்கரணை பெரும்பாக்கம் நூக்கம்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஷிர்ஷா(39). மென் பொறியாளரான இவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி ஜிகானா (வயது 35). கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு 2½ வயதில் பரி என்ற பெண் குழந்தையும், 5 மாதத்தில் ஷரியா என்ற பெண் குழந்தையும் உள்ளது. மென் பொறியாளர் ஷிர்ஷா, ஜிகானா தம்பதிகள் இடையே அடிக்கடி குடும்ப தகராறு, வாக்குவாதம் , மோதல்கள் இருந்துள்ளது.

இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் இருவருக்கும் இடையே தோன்றிய மனக்கசப்பு வாக்குவாதம் காரணமாக ஏற்பட்ட கோபத்தில் மென் பொறியாளர் ஷிர்ஷா கடந்த ஒரு மாதமாக வீட்டிற்கே வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஜிகானா தனது 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

கணவரை தொடர்பு கொள்ள ஜிகானா பல முறை முயன்றும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் அவர் கணவரை காணாமல் தவித்து வந்துள்ளார். கணவர் பிரிந்து சென்ற வேதனையில் இருந்த அவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

கணவர் இல்லாத வாழ்க்கை அவருக்கு மன உலைச்சலை தந்துள்ளது, இதனால் வாழ பிடிக்காத அவர் தனது இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார்.

தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் பாலில் விஷத்தை கொடுத்த அவர் குழந்தைகள் உயிரிழந்தவுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். விடிய விடிய வீட்டின் விளக்குகள் எரிவதும் அதிகாலையில் கதவு திறக்காமல் விளக்குகள் எரிந்தபடி இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த அக்கம் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஜிகானா தூக்கில் தொங்கியது தெரிந்தது.

உடனடியாக பள்ளிக்கரணை போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் ஜிகானாவும், கீழே இரண்டு குழந்தைகளும் இறந்த நிலையிலும் கிடந்தனர். மூவர் உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், கணவர் பிரிந்து சென்ற ஏக்கத்தில் ஜிகானா 2 குழந்தைகளுக்கு பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொன்றிருப்பதும், பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது.

மனைவி குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து கணவர் ஷிரஷாவுக்கு போலீஸார் தகவல் தெரிவிக்க முயன்ற நிலையில் அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் எங்கிருக்கிறார் என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x