Last Updated : 02 Dec, 2023 02:49 PM

9  

Published : 02 Dec 2023 02:49 PM
Last Updated : 02 Dec 2023 02:49 PM

ED அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை திட்டம்: மதுரையில் 13 மணி நேர சோதனையில் நடந்தது என்ன?

உள்படம்: அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி

மதுரை: அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற விவகாரம் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சில அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராகப் (Enforcement Officer) பணி புரிந்துவந்தவர் அங்கித் திவாரி (Ankit Tiwari). இவர் கடந்த 29.10.2023 அன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவரான சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது மருத்துவர் சுரேஷ்பாபு மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மருத்துவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

இந்நிலையில், முடித்துவைக்கப்பட்ட வழக்கை சுட்டிக்காட்டி, அவ்வழக்கில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த வேண்டும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், 30.10.2023 அன்று மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வரவேண்டும் என்றும் மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் அமலாக்கத் துறை அதிகாரி அங்கிட் திவாரி கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அரசு மருத்துவர் மதுரைக்குச் சென்றபோது அங்கித் திவாரி, மருத்துவர் சுரேஷ்பாபுவின் காரில் ஏறியிருக்கிறார். அதன் பிறகு நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.3 கோடி தரவேண்டும் என்றும், பின்னர் தனது உயரதிகாரிகளோடு பேசுவதாக தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என்றும் பேரம் பேசியுள்ளார்.

பிடிபட்டது எப்படி? - இதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 1-ஆம் தேதி அரசு மருத்துவர் முதல் தவணையாக ரூ.20 லட்சம் பணத்தை அவரிடம் வழங்கியுள்ளார். பின்னர், மேல் அதிகாரிகளுக்கும் பங்கு தர வேண்டி உள்ளதால் பேசியபடி முழுத் தொகையான ரூ.51 லட்சத்தையும் தரவேண்டும், இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபு, கடந்த நவம்பர் 30-ஆம் தேதி அன்று திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.

முதற்கட்ட விசாரணையில் இவ்வாறு செய்தது அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி என்றும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டி பணம் வசூலித்துள்ளார் என்றும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இரண்டாவது தவணையாக வெள்ளிக்கிழமை காலை திண்டுக்கல்லில் வைத்து 20 லட்சம் லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டபோது அவரை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து, மதுரையில் உள்ள அங்கித் திவாரியின் வீட்டில் சோதனை நடைபெற்றது. அதன்பிறகு, மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கத் துறை துணை மண்டல அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு விசாரணை தொடங்கியது. இந்த நிலையில், விடிய விடிய சோதனை நடத்தப்பட்டு அதிகாலை 7 மணிக்கு முடிவடைந்தது. அப்போது 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினரும், 50-க்கும் மேற்பட்ட இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

13 மணி நேர சோதனை: முன்னதாக, லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனைக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் மறுத்தபோது அவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தி அலுவலகத்தில் சென்று சோதனை நடத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடரந்து அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையின்போது அங்கிட் திவாரிக்கு தொடர்புடைய பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

முன்னதாக, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு இரவு உணவாக பிரியாணி வழங்கப்பட்டது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் சோதனை நடைபெற்ற நிலையில் கோயம்புத்தூரில் இருந்து 10-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் (CRPF) படையினர் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு நள்ளிரவு 1 மணிக்கு வருகை தந்து பாதுகாப்புக்குச் செல்ல முயன்றனர்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தல்லாகுளம் காவல் நிலைய காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன் ஏற்கெனவே இந்தோ - திபெத் படையினர் பாதுகாப்பு பணியில் உள்ளதால் சிஆர்ஃபிஎஃப் படையினரை அனுமதிக்க முடியாது என கூறினர். அப்போது அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்த நிலையில், காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து, சிஆர்பிஎஃப் அதிகாரிகள் 6 மணி நேரத்துக்கு மேலாக வெளியிலயே காத்துக் கிடந்தனர். இதனால் அமலாக்கத் துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனையின்போது கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அம்ரித் திவாரி அமலாக்கத் துறையின் பெயரில் யாரையும் மிரட்டியோ அல்லது அச்சுறுத்தியோ இதேபோன்ற யுக்தியை பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளாரா என்ற கோணத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இதேபோன்று அம்ரித் திவாரி லஞ்சம் பெற்ற நிகழ்வில் பிற அமலாக்கத் துறை அலுவலர்களுக்கு தொடர்புள்ளதா என்ற வகையிலும் ஆவணங்களை கைப்பற்றினர்.

சம்மன் அனுப்ப திட்டம்: மதுரை அமலாக்கத் துறை அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அம்ரித் திவாரி பயன்படுத்திய அறையில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யசீலன் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி விடிய விடிய அதிகாலை 7 மணிவரை 13 மணி நேரம் சோதனை நடைபெற்று முடிவடைந்தது. சோதனையின் முடிவில் பல்வேறு முக்கிய ஆவணங்களையும், வருகை பதிவேடுகளையும் கைப்பற்றினர்.

இதேபோன்று கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரியின் வங்கிக் கணக்கு பணப் பரிவர்த்தனை, மெயில் மற்றும் வாட்ஸ் அப் தகவல்கள் குறித்தும், ஆவணங்களில் பதிவிட்டுள்ள தகவல்கள் மற்றும் அங்கித் திவாரி கையாண்ட வழக்குகளுக்கான ஆவணங்களையும் கைப்பற்றினர். மேலும், மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை 13 மணி நேரம் சோதனை நடத்திய நிலையில், சில அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத் துறையினர் திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x