Published : 01 Dec 2023 02:16 PM
Last Updated : 01 Dec 2023 02:16 PM

வானிலை முன்னெச்சரிக்கை: வடதமிழகம், டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

சென்னை: "அடுத்து வரும் 4 தினங்களைப் பொறுத்தவரை, வடதமிழக மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். இன்றும் நாளையும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 3-ம் தேதி திருவள்ளூர், சென்னை தொடங்கி கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்" என்று வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்குக்கே சுமார் 780 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே சுமார் 940 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 3-ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். பின்னர் இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வடதமிழக கடலோரப் பகுதிகளில் சென்னைக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே, டிசம்பர் 4-ம் தேதி மாலை கரையைக் கடக்கக்கூடும்.

அடுத்து வரும் 4 தினங்களைப் பொறுத்தவரை, வடதமிழக மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். இன்றும் நாளையும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டிச.3-ம் தேதி, திருவள்ளூர், சென்னை தொடங்கி கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

டிச.4-ம் தேதி, சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

பலத்த காற்று எச்சரிக்கை: டிச.3-ம் தேதி, திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். டிச.4-ம் தேதி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 80 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: அடுத்து வரும் 4 தினங்களுக்கு தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதி மற்றும் ஆந்திர கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை, கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல், இன்று வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பதிவான மழையின் அளவு 34 செ.மீ. இந்த காலக்கட்டத்தில் இயல்பு அளவு 36 செ.மீ. இது இயல்பைவிட 6 சதவீதம் குறைவு.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். டிச.3 மற்றும் 4ம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த இருதினங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x