Published : 29 Nov 2023 04:43 AM
Last Updated : 29 Nov 2023 04:43 AM

‘நம்மை காக்கும் 48’ பயனாளிகள் எண்ணிக்கை 2 லட்சம் ஆனது: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தில் ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’ திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. அவர்களது சிகிச்சைக்காக தமிழக அரசு ரூ.173.77 கோடி வழங்கியுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் விபத்து உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’ என்ற திட்டம் கடந்த 2021 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, தமிழக எல்லைக்குள் நிகழும் சாலை விபத்துகளில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். இதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.

சமீபத்தில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் ஒருவர், சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’ திட்டத்தின் 2 லட்சமாவது பயனாளியான அவரை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, “தமிழகத்தில் 455 அரசு மருத்துவமனைகள், 237 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 692 மருத்துவமனைகளில் இத்திட்டத்தின்கீழ் அவசர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை தற்போது 2 லட்சத்தை கடந்துள்ளது. இந்த 2 லட்சம் பேருக்காக தமிழக அரசு இதுவரை ரூ.173.77 கோடி வழங்கியுள்ளது” என்றார்.

தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் கோவிந்தராவ், ரேலா மருத்துவமனை இயக்குநர் முகமது ரேலா, தலைமை நிர்வாக அலுவலர் இளங்குமரன் கலியமூர்த்தி, இணை இயக்குநர் ரவிபாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முதல்வர் காப்பீடு திட்ட முகாம்: தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் இணைந்து செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் கடந்த 2009-ல் தொடங்கப்பட்டு, இதுவரை 1.45 கோடி குடும்பங்கள் இத்திட்டத்தில் மருத்துவ காப்பீடு அட்டை பெற்றுள்ளன. விடுபட்ட குடும்பங்களும் இதில் சேர்வதற்காக, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, வரும் டிச.2-ம் தேதி தமிழகம் முழுவதும் 100 முகாம்கள் நடத்தப்படுகின்றன என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x