Published : 27 Nov 2023 05:27 AM
Last Updated : 27 Nov 2023 05:27 AM

மக்கள் ஆதரவுடன் நீட் விலக்கு நிறைவேறியே தீரும்: மருத்துவர் சங்க மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய முடியாதுஎன ஆணவத்தோடு எந்தப் பதவியில் இருப்பவர்கள் சொன்னாலும், நீட் விலக்கு மக்களின் பேராதரவுடன் நிறைவேறியே தீரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நவீன மருத்துவம் தொடர்பாக சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 4-வது மாநாடு, 20-ம் ஆண்டுதொடக்க விழா மற்றும் கருத்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் த.அறம் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது: உயிர்களை காப்பாற்றுவது மருத்துவர்களின் தொழில் மட்டுமல்ல. சமுதாயத்துக்காக செய்கிறசேவை. அப்படிப்பட்ட சமுதாயத்தில் சமத்துவம் இல்லை என்றால்,அது ஆரோக்கியமான சமுதாயமாக இருக்க முடியாது. சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளால் சமுதாயத்தின் சமத்துவம் சீர்குலைந்து நோய்வாய்ப்பட்டிருந்தால் அதற்கு அளிக்கப்படும் சிகிச்சையே சமூகநீதி.

இந்த சிகிச்சையை அம்பேத்கர் அரசியல் சட்டத்தின் வாயிலாக கொண்டு வந்தார். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வாழும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி சிகிச்சையை வி.பி.சிங் வழங்கினார். அவரை போற்றும் விதமாகஇந்தியாவிலேயே முதல்முறையாக, சென்னையில் வி.பி.சிங்கின்சிலை நாளை திறக்கப்படுகிறது.

இந்திய மாநிலங்களில் மிகச்சிறப்பான மருத்துவக் கட்டமைப்பை கொண்டுள்ள மாநிலம் தமிழகம். தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட மருத்துவக் கட்டமைப்போடு இந்தியாவின் வேறெந்த மாநிலத்தையும் ஒப்பிட முடியாது. ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்க அளவில் நம்முடைய மருத்துவக் கட்டமைப்புகள் வளர்ந்திருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளை சிதைக்கும் வகையில், நீட் தேர்வுதிணிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மக்களின் உயிர்காக்கும் நவீன அறிவியல் மருத்துவத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான ஒருங்கிணைந்த மருத்துவம், வேதகால மருத்துவம், ஆன்மிக மருத்துவம், ஜோதிட மருத்துவம் என்று போலி அறிவியலைத் திணிக்கும் முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கின்றன.

நெக்ஸ்ட் தேர்வு: நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது என ஆணவத்தோடுஎந்தப் பதவியில் இருப்பவர்கள் சொன்னாலும், நீட் விலக்கு மக்களின் பேராதரவுடன் நிறைவேறியே தீரும். இதையடுத்து தற்போதுஅடுத்த ஆபத்தாக நெக்ஸ்ட்தேர்வு உள்ளே நுழைகிறது.

மாநில உரிமைகளையும், மருத்துவக் கட்டமைப்பையும் சிதைக்கும் மத்திய பாஜகவின் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டம் மருத்துவர்களுடையது மட்டுமல்ல. தமிழகத்தின் மாநில உரிமைக்கானது.

இந்த போராட்டத்தில் எப்போதும் தமிழக அரசு துணைநிற்கும். மருத்துவக் கட்டமைப்பையே நோயாளி ஆக்கியவர்களிடம் இருந்து மருத்துவத் துறையையும், நாட்டையும் மீட்க இன்னும்6 மாதம் தேவையாக இருக்கிறது. வெற்றிகரமான சிகிச்சையை நிச்சயமாக இந்திய மக்கள் அளிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து மாநாட்டில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தமருத்துவர் கே.ரஜனி, சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் கே.பாலகுமாரி, கேரளாவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் டி.ரோசினரா, திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த மருத்துவர் வி.சவுந்திரராஜன் ஆகியோரது மருத்துவ சேவையை பாராட்டி சிறந்த மருத்துவர்களுக்கான விருதுகளை விசிக தலைவர் திருமாவளவன் வழங்கினார்.

விழாவில் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்தரநாத், மாநில துணைத்தலைவர் என்.வெங்கடேஷ், கே.சுப்பராயன் எம்.பி., சமாதானம் மற்றும் முன்னேற்றத்துக்கான இந்திய டாக்டர்கள் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் ஏ.ஆர்.சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x