Published : 26 Nov 2023 05:45 AM
Last Updated : 26 Nov 2023 05:45 AM

இலவச பேருந்துகளில் பெண் பயணிகளிடம் வயது, சாதி உட்பட புள்ளிவிவரம் சேகரிப்பதை நிறுத்த வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அரசின் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் பெண்களிடம் சாதி, வயது, செல்போன் எண் உள்ளிட்ட புள்ளிவிவரங்கள் சேகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கை:

கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம், அவர்களது பெயர், வயது, கைபேசி எண், சாதி போன்ற 15 விவரங்களை நடத்துநர்கள் விசாரித்து, போக்குவரத்துத் துறைவழங்கியுள்ள படிவங்களில் அவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்என திமுக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக, பெண்களிடம் பெயர், வயது மற்றும் கைபேசிஎண்ணை கேட்பது, அவர்களதுதனி உரிமையில் தலையிடுவது போலாகும். அதுவும், மொபைல்எண்ணை நடத்துநர்கள் வாங்கும்போது, அப்பெண்களுக்கு அருகில்உள்ளவர்களும் அந்த கைபேசி எண்ணை குறிப்பெடுக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் ஒருசில நடத்துநர்களோ அல்லது கைபேசி எண்ணை குறிப்பெடுத்த அருகில் உள்ளவர்களோ அப்பெண்களிடம் பேச முயற்சி செய்யக்கூடும். மேலும், பெண்களின் கைபேசிக்கு வேண்டாத புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்புவதற்கும் வாய்ப்புள்ளது.

இவை அனைத்தையும்விட, பயணம் செய்யும் பெண்களிடம் நீங்கள் என்ன சாதி என்று கேட்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. உலகில் எங்கேயும் இதுபோன்ற கேள்விகளை கேட்டதில்லை.

ஏற்கெனவே, சில மாவட்டங்களில் சாதிய ரீதியாக வேண்டாத பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்வுகளை திமுக அரசால் இதுவரை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், பெண்களிடம் இதுபோன்ற விவர சேகரிப்பு தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டால் ஏற்படும் பின்விளைவுகளை இந்தஅரசு சிந்தித்ததா என்று தெரியவில்லை.

போக்குவரத்துத் துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு, அதிமுக சார்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக இதுபோன்ற புள்ளிவிபரங்களை சேகரிக்கும் பணிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.

முன்னாள் டிஜிபி மீது வழக்கு: இதனிடையே முதல்வர் ஸ்டாலின் குறித்தும் கோயில்கள் குறித்தும் தவறான தகவல்களை முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.நட்ராஜ் வாட்ஸ்அப் குழு, எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாக திருச்சி எஸ்பியிடம் புகார் தரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர் மீது 6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது எக்ஸ் தள பதிவில், சமூக வலைதளங்களில் வந்த செய்திகளைப் பிரதிபலித்ததற்காக நட்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கையும், சகிப்புத்தன்மையற்ற மனநிலையையுமே காட்டுகிறது. இந்த வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x