Published : 25 Jan 2018 09:24 AM
Last Updated : 25 Jan 2018 09:24 AM
பேருந்து கட்டண உயர்வால் தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழலைச் சரிசெய்ய உடனடியாக சட்டப்பேரவையை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் நேற்று அளித்த பேட்டி:
போக்குவரத்துக் கட்டண உயர்வு காரணமாக கட்சிகள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் போராடி வருவதால் தமிழகத்தில் ஒரு அசாதாரணமான சூழல் உருவாகியுள்ளது. அதனால் உடனடியாக சட்டப்பேரவையை கூட்டி தமிழகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலைமையைப் பற்றி விவாதிக்க வேண்டும்.
சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது ஆளுநர் எழுந்து நின்றார். ஆனால், விஜயேந்திர சுவாமிகள் எழுந்து நிற்காதது கண்டிக்கத்தக்கது. இதனை திமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதுவும் ஆளுநருக்கு முன்னால் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது தமிழ்த்தாயை அவமானப்படுத்தியதாக கருதுகிறேன்.
தமிழ்த்தாய் வாழ்த்தின்போது அவர் தியானம் செய்து கொண்டிருந்ததாகக் கூறுகிறார்கள். தியானம் என்பது அவருடைய விருப்பம். அவர் எப்படி வேண்டுமானாலும் தியானம் இருக்கலாம். ஆனால், தேசிய கீதம் இசைக்கிறபோது ஏன் தியானத்தில் இல்லை? ஒரு தவறு நடந்துவிட்டது. அதனை மறைப்பதற்காகவே இப்படி தந்திரமாக செய்திகள் பரப்பப்படுகிறது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரின் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் ஏற்கெனவே சட்டமன்றத்தில் பலமுறை பேசியிருக்கிறேன். இது தொடர்பாக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் பேசியுள்ளேன். அதைத்தான் இப்போதும் வலியுறுத்துகிறேன் என்றார் மு.க.ஸ்டாலின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT