Published : 24 Jan 2018 04:48 PM
Last Updated : 24 Jan 2018 04:48 PM

தரமணியில் பயங்கரம்: போக்குவரத்து போலீஸார் தரக்குறைவாக பேசி தாக்கியதால் மனமுடைந்த கால்டாக்சி ஓட்டுநர் தீக்குளிப்பு

சென்னை தரமணியில் போக்குவரத்து போலீஸார் தரக்குறைவாக பேசியதுடன் இரும்புக் கம்பியால் தாக்கியதால் மனமுடைந்த கால்டாக்சி ஓட்டுநர் ஒருவர் தீக்குளித்தார். 

உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 65% தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நெல்லையைச் சேர்ந்தவர் மணிகண்டன்(21). சென்னை தாம்பரத்தில் வசிக்கிறார். கால்டாக்சி ஓட்டுநராக பணியாற்றுகிறார். சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம் கார் ஓட்டுநராக பணியாற்றுகிறார்.

இவர் இன்று மதியம் தரமணி அருகே ஓ.எம்.ஆர் சாலையில் சவாரி இறக்கிவிட்டு வந்துகொண்டிருந்தார். அப்போது இவரது காரை போக்குவரத்து போலீஸார் விஜயகுமார், தாமரைச்செல்வன் மற்றும் சிலர் மடக்கி உள்ளனர்.

காரின் ஆவணங்களை கேட்டுள்ளனர். அசல் ஓட்டுநர் உரிமம்  உள்ளதா எனக் கேட்டுள்ளனர். மணிகண்டன் அனைத்தையும் காட்டியுள்ளார். இருந்தும் அவர்கள் மணிகண்டனை பணம் கேட்டுள்ளனர். மணிகண்டன் என்னிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளன அப்புறம் ஏன் பணம் கேட்கிறீர்கள்? என்று கேட்டிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த இரண்டு பேரும் மணிகண்டனை தரக்குறைவாக பேசியுள்ளனர். சீட் பெல்ட் ஏன் போடவில்லை என்று கேட்டுள்ளனர். ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

பொதுமக்கள் முன்னிலையில் தன்னை தரக்குறைவாக பேசியதால் மனமுடைந்த மணிகண்டன் அவர்கள் திட்டி தாக்கவந்ததை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த விஜயகுமார், தாமரைச்செல்வன் மேலும் இரண்டு போலீஸார் இரும்பு கம்பியால் மணிகண்டனை தாக்கியுள்ளனர். அவரது செல்போன், அசல் ஓட்டுநர் உரிமத்தை பறித்து வைத்துக்கொண்டனர்.

"உன் சகோதரிகளை போய் படம் எடுத்து யூடியூபில் போடு" எனத் தகாத வார்த்தைகளை போலீஸார் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. பொதுவெளியில் மணிகண்டனை போலீஸார் தாக்கியதை பார்த்த பொதுமக்கள் அவர்களை விலக்கி விட்டுள்ளனர்.

பொதுமக்கள் முன்னிலையில் தன்னை தாக்கி, குடும்பத்தாரைப் பற்றி தரக்குறைவாக பேசியதால் மனமுடைந்த மணிகண்டன் தனது காருக்கு திரும்பி செல்போனில் நடந்த சம்பவங்களை வாக்குமூலமாக பதிவு செய்தார். பின்னர் காரில் ஊற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த பெட்ரோலை எடுத்து தன் மேல் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த தீக்குளிப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயை அணைத்து மணிகண்டனை காப்பாற்ற முயன்றனர்.

பொதுமக்களில் சிலர் ஆவேசத்துடன் போக்குவரத்து போலீஸாரை திட்டினர். இதனால் பயந்து போன அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

படுகாயத்துடன் உயிருக்கு போராடிய மணிகண்டன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியால் கொதிப்படைந்த பொதுமக்கள் தரமணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x