Published : 22 Jan 2018 11:04 AM
Last Updated : 22 Jan 2018 11:04 AM

சென்னையில் இன்று மின் ஊழியர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை- சுமூக தீர்வு ஏற்படுமா?

மின் வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக சென்னையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் சுமூக தீர்வு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட மின் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழக மின் வாரியத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, 11-வது ஊதிய ஒப்பந்தம் 2015 ஜன. 1-ம் தேதி அன்று போட்டிருக்க வேண்டும். ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒப்பந்தம் போடப்படவில்லை. ஊதிய உயர்வு குறித்து தொழிற்சங்கங்கள், மின் வாரிய அதிகாரிகளுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.

ஊதிய உயர்வு மட்டுமின்றி நிலுவைத் தொகை, காலி பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை மின் ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அந்த கோரிக்கைகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இதனிடையே, மின் வாரியத்தை கண்டித்தும் தங்களது கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் மின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். ஏற்கெனவே, சில முக் கிய தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக நோட்டீஸ் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மின் ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது. இதில் மின் வாரிய அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர் நலவாரிய அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என மின் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x