Published : 15 Nov 2023 03:48 PM
Last Updated : 15 Nov 2023 03:48 PM

வானிலை முன்னறிவிப்பு | தமிழக டெல்டா, கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு

சென்னை: "அடுத்த 24 மணி நேரத்துக்கு, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்" என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது விசாகப்பட்டனத்துக்கு தென்கிழக்கே சுமார், 510 கி.மீ, தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

இது முதலில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து 17ம் தேதி வடமேற்கு வங்கக் கடல் பகுதியில், ஒடிசா கடற்கரைப் பகுதியில் நிலவக்கூடும். மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 36 இடங்களில் கன மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், கடலோர மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்துவரும் 24 மணி நேரத்துக்கு டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை, பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் சற்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றும் நாளையும், குமரிக்கடல், மன்னார் வளைகுடா தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மேலும் நவ.15 முதல் நவ.17 வரை மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் 1 முதல் நவம்பர் 15 வரையிலான காலக்கட்டத்தில், பதிவான மழையின் அளவு 24 செ.மீ. இந்த காலக்கட்டத்தின் சராசரி அளவு 27 செ.மீ. இது 13 சதவீதம் இயல்பைவிடக் குறைவு" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x