Last Updated : 15 Nov, 2023 03:45 PM

1  

Published : 15 Nov 2023 03:45 PM
Last Updated : 15 Nov 2023 03:45 PM

புதுச்சேரியில் பழங்குடியினர் கவுரவ தின விழாவில் பழங்குடியினர் தரையில் அமரவைக்கப்பட்டதால் சர்ச்சை

படங்கள்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பங்கேற்ற பழங்குடியினர் கவுரவ தின விழாவில் தரையில் பழங்குடியினர் அமரவைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து பத்திரிகையாளர்கள் புகைப்படங்கள் எடுத்த சூழலில், அதன் பின்னர் நாற்காலிகள் போட்டப்பட்டன. அதைத் தொடர்ந்து ‘என்ன செய்தீர்கள்?’ என்று சராமரியாக கேள்வி எழுப்பப்பட்டதால் அரசு செயலர், ஆட்சியர் என அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் பழங்குடியினர் கவுரவ தின விழா கொண்டாட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த விழா காணொளி காட்சி மூலம் புதுவை கம்பன் கலையரங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. புதுவை ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் நடந்தது. இந்நிகழ்வில் துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் சரவணக்குமார், செல்வ கணபதி எம்பி, பேரவை துணைத் தலைவர் ராஜவேலு, அரசு செயலர்கள் முத்தம்மா, கேசவன், ஆட்சியர் வல்லவன், துறை இயக்குனர் இளங்கோவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பழங்குடியினர் தலைவர் பகவான் பிர்சா முண்டா உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது. கம்பன் கலையரங்கில் நடந்த பழங்குடியினர் கவுரவ தின விழாவுக்கு வந்த பழங்குடியின மக்கள் அமர போதிய இருக்கை வசதியில்லை. இதனால், அவர்கள் கம்பன் கலையரங்கில் தரையில் அமரவைக்கப்பட்டிருந்தனர். இதைக் கண்ட பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தனர். விழாவுக்கு அழைத்தோர்தான் இங்கே அமரச் சொன்னார்கள் என்றனர். இதையடுத்து, அதிகாரிகள் நாற்காலிகளை கொண்டு வந்து அங்கு போட்டு அவர்களை அமரும்படி கூறினர். இதையடுத்து அங்கிருந்தோர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

அப்போது பழங்குடியினர் விடுதலை இயக்க தலைவர் ஏகாம்பரம், "பழங்குடியினர் மக்களுக்கு பல கிராமங்களில் பட்டா வழங்கவில்லை. ஆண்டுதோறும் விழா மட்டும் நடத்தப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்தவில்லை. இந்த விழாவுக்கு சுமார் ரூ.3 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதியில் 4 பேருக்கு வீடு கட்டித் தந்திருக்கலாம். பழங்குடியின அமைப்பை சேர்ந்தவர்களை விழா மேடையில் அமரவைத்து கவுரவிக்கவில்லை. முத்ரா கடன் எந்த பழங்குடியினருக்கு தரப்பட்டுள்ளது" என குற்றம்சாட்டினார். அப்போது, பெண்கள் சிலரும் தங்கள் பகுதியில் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.

அதையடுத்து, குறைகளைத் தெரிவித்தோரை ஆளுநர் அழைத்தார். ஆனால், மக்களை அழைத்து கேளுங்கு என்று செல்ல மறுத்தனர். அதையடுத்து, ஏகாம்பரத்தை ஆளுநரிடம் வருமாறு துறைச் செயலர் கேசவன், ஆட்சியர் வல்லவன், துறை இயக்குநர் இளங்கோவன் ஆகியோர் அழைத்தும் அவர் செல்லவில்லை. இதைத் தொடர்ந்து விழாவுக்கு வந்திருந்தோரில் ஆளுநரிடம் சென்று தங்கள் குறைகளை தெரிவித்தனர். அவர்களை ஆளுநர் சமாதானப்படுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x