Published : 15 Nov 2023 05:30 AM
Last Updated : 15 Nov 2023 05:30 AM

குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு; ஓய்வூதியர்களுக்கு வழங்காதது பாரபட்சமானது - உயர் நீதிமன்றம் அதிருப்தி

கோப்புப்படம்

சென்னை: ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வை வழங்கிவிட்டு, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க மறுத்த தமிழ்நாடு குடிநீர்வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் செயல் பாரபட்சமானது என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாகவும், ஓய்வூதியம் 28 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது.

அதனடிப்படையில் தமிழக அரசும் கடந்த 2022 -ம் ஆண்டு ஜனவரியில் இருந்து தமிழக அரசுஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தியது.

இந்த உயர்வு தமிழ்நாடு குடிநீர்வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படவில்லை எனக்கூறி ஓய்வூதியதாரர்கள் நலச்சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஏற்கெனவே பிறப்பித்த ஒரு அரசாணைப்படி அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டத்தை நஷ்டத்தில் இயங்கக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு அமல்படுத்த வேண்டாம்என்றும், ஒரு வேளை அமல்படுத்துவதாக இருந்தால் அரசின் முன்அனுமதி பெற வேண்டும் எனவும்உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அரசின் ஒப்புதல் கேட்டு குடிநீர் வாரியம் அனுப்பிய கடிதத்தை ஆய்வு செய்த தமிழக அரசு கடந்த2022 அக்.1 முதல் வாரியத்தின்சொந்த செலவில் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வைவழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, குடிநீர் வழங்கல்மற்றும் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வை கொடுத்துவிட்டு, ஓய்வூதியதாரர்களுக்கு மறுப்பது பாரபட்சம் என்றும், உண்மையிலேயே நிதி நெருக்கடியில் நஷ்டத்தில் இயங்குவதாக இருந்திருந்தால்ஊழியர்களுக்கும் கொடுத்திருக்க கூடாது. மேலும் ஊழியர்களுக்கு ஜனவரியில் இருந்தும், ஓய்வூதியர்களுக்கு அக்டோபரில் இருந்தும் இந்த உயர்வை வழங்க உத்தரவிட்டதும் பாரபட்சமானது என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ஓய்வூதியதாரர்களுக்கும் கடந்த 2022 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வை கணக்கிட்டு 4 மாதங்களில் வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x