Published : 14 Jan 2018 10:10 AM
Last Updated : 14 Jan 2018 10:10 AM

போகியுடன் தொடங்கியது 4 நாள் பண்டிகை: சொந்த ஊரில் பொங்கல் கொண்டாட பல லட்சம் பேர் பயணம் - சென்னையில் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது

தமிழகம் முழுவதும் உற்சாகமாகவும் மகிழ்ச்சிப் பெருக்குடனும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை நேற்று போகியுடன் தொடங்கியது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பேருந்து, ரயில் மற்றும் வாகனங்களில் பல லட்சம் பேர் புறப்பட்டுச் சென்றதால் கூட்டம் அலைமோதியது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என 4 நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. போகியுடன் பொங்கல் பண்டிகை நேற்று தொடங்கியது. சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடுவதற்காக, சென்னையில் இருந்து கடந்த ஒரு வாரமாகவே மக்கள் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்ற வண்ணம் இருந்தனர்.

இருப்பினும், போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் காரணமாக, அரசுப் பேருந்துகள் இயக்குவதில் கடந்த 11-ம் தேதி வரை சிக்கல் நீடித்தது. 8 நாட்களாகத் தொடர்ந்த போராட்டம் 11-ம் தேதி இரவு முடிவுக்கு வந்தது. இதையடுத்து, பேருந்துகளை போதிய அளவில் இயக்க தமிழக அரசு முழு ஏற்பாடுகளை செய்திருந்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு 12-ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. சில தனியார் நிறுவனங்களுக்கு 13-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், மக்கள் நேற்று காலை முதலே சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்லத் தொடங்கினர். இதனால், கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது.

கோயம்பேடு, சைதாப்பேட்டை, பூந்தமல்லி, அண்ணா நகர், தாம்பரம் என 5 இடங்களில் இருந்தும் அரசுப் பேருந்துகள் பிரித்து இயக்கப்பட்டதால், போக்குவரத்து நெரிசலும் தவிர்க்கப் பட்டது.

11,983 பேருந்துகள் இயக்கம்

கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பணிமனைகளில் சிறப்பு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மக்கள் வர வர, ‘சிறப்பு பேருந்து’ என பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, உள்ளே கொண்டு வரப்பட்டு இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 2,382 சிறப்பு பேருந்துகளை சேர்த்து மொத்தம் 4,657 பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன. பொங்கலை முன்னிட்டு, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 5,158 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 11,983 பேருந்துகள் இயக்கப்பட்டன.

அமைச்சர் ஆய்வு

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார். மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய கூடுதலாக பேருந்துகளை இயக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘11-ம் தேதி இரவு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்த அடுத்த சில மணிநேரங்களில் வெளியூர் பணிமனைகளில் இருந்து இரவோடு இரவாக கோயம்பேடு, அண்ணா நகர், தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகளை கொண்டு வந்தோம். இதனால், 12-ம் தேதி காலை முதலே, வாகனப் போக்குவரத்து சீராக நடைபெற்றது. பேருந்து நிலையங்களில் மக்கள் அதிக நேரம் காத்திருப்பதும் தவிர்க்கப்பட்டது. கடந்த 11 முதல் 13-ம் தேதி வரை சென்னையில் இருந்து இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் 4.5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, பொதுமக்கள் ஊர் திரும்ப வசதியாக பல்வேறு இடங்களில் இருந்து போதிய அளவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்’’ என்றனர்.

ரயில்களில் அதிக கூட்டம்

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, அனந்தபுரி, வைகை, பாண்டியன் உள்ளிட்ட தென் மாவட்ட ரயில்களிலும், சிறப்பு ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘அரசு பேருந்துகளை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டதால், மக்கள் அதிக அளவில் ரயில்களில் முன்பதிவு செய்து காத்திருந்தனர். எனவே, இயன்ற அளவுக்கு கூடுதல் பெட்டிகள் இணைப்பு, முன்பதிவு இல்லாத ரயில்களை இயக்குவது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். சென்னை எழும்பூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 10-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. இதனால், சுமார் 2 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 20 முதல் 25 சதவீதம் அதிகம்’’ என்றனர்.

இது மட்டுமின்றி, ஆம்னி பேருந்துகள், சொந்த வாகனங்கள், வாடகை கார்கள் மூலமாகவும் ஏராளமானோர் தங்கள் ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. பழைய துணி, குப்பைகள், வீட்டில் தேங்கி இருந்த தேவையற்ற பொருட்களை வீட்டில் இருந்து அப்புறப் படுத்தி தீயிட்டு எரித்தும் சிறுவர்கள் மேளம் கொட்டியும் போகி யை மக்கள் கொண்டாடினர்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொங்கலுக்குத் தேவை யான பொருட்களை சந்தை, கடைகளில் இருந்து நேற்றே வாங்கிச் சென்றனர்.

கோயம்பேடு மலர் சந்தை பகுதியில் திறக்கப்பட்டுள்ள பொங் கல் சிறப்பு சந்தையும் நேற்று மக்கள் கூட்டத்தால் களைகட்டி காணப்பட்டது. குறிப்பாக, பொங்கல் பண்டிகைக்குத் தேவையான கரும்பு, வாழைப்பழம், பூசணிக்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, தோரணங்கள், பழ வகைகள், மஞ்சள் கொத்து உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் மக்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x