Published : 26 Jan 2018 09:48 AM
Last Updated : 26 Jan 2018 09:48 AM
பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோபி கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது. பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கரட்டடிபாளையத்தில் செயல்பட்டு வரும், கோபி கலை-அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் 3-வது நாளாக வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி செல்லும் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்தினால், கரட்டடிபாளையத்தில் இருந்து கலைக்கல்லூரிக்குச் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியர் கூறும்போது, ‘இக்கல்லூரியில் 4 ஆயிரம் மாணவ, மாணவியர் படித்து வருகிறோம். கிராமப் பகுதிகளைச் சேர்ந்த நாங்கள் அரசுப் பேருந்தை நம்பியே உள்ளோம். தற்போதைய பேருந்து கட்டண உயர்வால் எங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டண உயர்வைத் திரும்பப்பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்’ என்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியருடன் கோபி கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கட்டணக் குறைப்பு செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
ஈரோடு - சென்னிமலை சாலையில் உள்ள ஈரோடு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் கல்லூரி முன்பாக நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டுமென வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். பத்து நிமிடங்கள் போராட்டம் நடத்திய மாணவ, மாணவியர் அதன் பின் வகுப்புகளுக்கு சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT