Last Updated : 09 Nov, 2023 05:13 PM

 

Published : 09 Nov 2023 05:13 PM
Last Updated : 09 Nov 2023 05:13 PM

விருதுநகர் காப்பகத்தில் 17 வயது சிறுமி தற்கொலை: காவல் துறை விசாரணை

விருதுநகர் அரசு உதவி பெறும் காப்பகம்

விருதுநகர்: விருதுநகரில் அரசு உதவிபெறும் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 17 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக காவல் துறை தரப்பில் வெளியிடப்பட்ட தகவல்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் தேவகோயில் தெருவைச் சேர்ந்தவர் மருதப்பாண்டி. இவரது மனைவி லிங்கம்மாள். இருவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்களது மகள் தவச்செல்வி (17). பிளஸ்-1 வரை படித்தவர். மருதப்பாண்டி பிரிந்து சென்றதால் லிங்கம்மாளும் அவரது மகள் தவச்செல்வியும் ஒன்றாக வசித்து வந்தனர். தவச்செல்வியும் அப்பகுதியைச் சேர்ந்த காளிராஜ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தவச்செல்வி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து சேத்தூர் காவல் நிலையத்தில் லிங்கம்மாள் புகார் அளித்தார்.

விசாரணையில், தவச்செல்வி அப்பகுதியைச் சேர்ந்த காளிராஜ் என்பவருடன் சென்றுள்ளது தெரியவந்தது. மேலும், தவச்செல்வியை கடத்தி பாலியல் குற்றம் செய்ததாக காளிராஜ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஜூலை 13-ம் தேதி காளிராஜ் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின்னர், தவச்செல்வி மீண்டும் காணாமல் போனார். இதுகுறித்து, கடந்த ஜூலை 30-ம் தேதி சேத்தூர் காவல் நிலையத்தில் லிங்கம்மாள் மீண்டும் புகார் அளித்தார். சேத்தூர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து தவச்செல்வியை தேடி வந்தனர். விசாரணையில், தவச்செல்வி கோவையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து, கடந்த 2-ம் தேதி கோவை சென்ற சேத்தூர் போலீஸார் தவச்செல்வியை அங்கிருந்து அழைத்து வந்தனர். மேலும், விருதுநகர் பாண்டியன் நகர் காந்தி நகரில் உள்ள அரசு உதவிபெறும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தக் காப்பகத்தில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 8 சிறுமிகள் இருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை காப்பகத்தில் உள்ள ஓர் அறைக்குள் சென்ற தவச்செல்வி உள்பக்கமாக கதவை தாழிட்டுக் கொண்டு இருந்துள்ளார். வெகு நேரமாக அறைக்கதவு திறக்கப்படாமல் இருந்ததால் காப்பகத்தில் உள்ள நிர்வாகி ஜஸ்டின் மற்றும் ஊழியர்கள் கதவை தட்டிப் பாத்துள்ளனர். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகம் ஏற்பட்டதால் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சேலையால் தூக்கிட்ட நிலையில் தவச்செல்வி இறந்து கிடந்தார். இதுகுறித்து பாண்டியன் நகர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் தவச்செல்வியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்தில் தடய அறிவியல் நிபுரணர்கள், போலீஸார் சோதனை நடத்தினர்.

மேலும், தவச்செல்வி தற்கொலை தொடர்பாக காப்பக நிர்வாகி ஜஸ்டின், ஊழியர்கள் மற்றும் உடனிருந்த சிறுமிகள் 7 பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். அதோடு, குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள், சைல்டுலைன் அலுவலர்கள் உள்ளிட்டோரும் விசாரணை நடத்தினர். குறிப்பாக, பாலியல் வழக்குகளில் மீட்கப்படும் சிறுமிகள், பெண்கள் இந்த அரசு காப்பகத்தில் பாதுகாப்புக்காக தங்கவைக்கப்படுவது வழக்கம். ஆனால், காப்பகத்திலேயே சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, காப்பகத்திலிருந்த மற்ற 7 சிறுமிகளின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர்களோடு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x