Published : 18 Jan 2018 10:13 AM
Last Updated : 18 Jan 2018 10:13 AM
அதிமுகவின் புதிய நாளிதழ், டிவி சேனல், ஜெயலலிதாவின் பிறந்ததினமான பிப்.24-ம் தேதி தொடங்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக நமது எம்ஜிஆரும், அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக ஜெயா டிவியும் இருந்தன.
கட்சியில் பல மாற்றங்கள்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. முதலில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தலைமையில் 2 அணிகள் செயல்பட்டன. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதும் பழனிசாமி, டிடிவி தினகரன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பின்னர் தினகரன் தனி அணியாக செயல்படத் தொடங் கினார். அதன்பிறகு கடந்த ஆகஸ்ட்டில் ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி அணிகள் இணைந்தன. அதுதான் உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இரட்டை இலை சின்னமும் அவர்களுக்கே வழங்கப்பட்டது. அதனால், தினகரன் தனியாக செயல்பட்டு வருகிறார்.
புதிய நாளிதழ், டிவி
நமது எம்ஜிஆர் நாளிதழ், ஜெயா டிவி நிர்வாகங்கள் சசிகலா குடும்பத்தினரிடம் உள்ளது. எனவே, ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கென்று அதிகாரப்பூர்வ நாளிதழோ, தொலைக்காட்சியோ இல்லாத நிலை இருந்தது.
இதனால், கட்சிக்கு புதிய நாளிதழ், டிவி சேனல் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
நமது புரட்சித்தலைவி அம்மா
இந்நிலையில், நடிகரும் அதிமுக பேச்சாளருமான ஜெயகோவிந்தன் நடத்தி வந்த ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ என்ற நாளிதழை, அதிமுக சார்பில் வாங்கி கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில், இந்த நாளிதழ் தொண்டர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. ஜெயலலிதா பிறந்த தினமான பிப்.24-ம் தேதி இந்த நாளிதழை அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
அதேபோல், கட்சிக்கென தனி டிவி சேனலும் தொடங்கப்பட உள்ளது. இதற்காக முன்னாள் எம்பி ஒருவருக்கு சொந்தமான டிவி சேனல் உட்பட சில சேனல் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஒன்றை கட்சி சார்பில் வாங்கி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான தொடக்கவிழாவும் பிப்.24-ம் தேதி நடக்கும் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT