Published : 06 Nov 2023 11:59 AM
Last Updated : 06 Nov 2023 11:59 AM

”ஈடுசெய்ய இயலாத இழப்பு”: புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ”புதுவை மாநில முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளில் மக்களுக்காகப் பணியாற்றியவருமான புதுவை கண்ணன் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுவை மாநில சட்டப்பேரவையின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ப.கண்ணன் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 74. பேரவைத் தலைவர், அமைச்சர், மாநிலங்களவை எம்பி என பல்வேறு பொறுப்புகளை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இவரின் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”புதுவை மாநில முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும்- அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளில் மக்களுக்காகப் பணியாற்றியவருமான புதுவை கண்ணன் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன்.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக இளம்வயது முதல் பணியாற்றிய கண்ணன், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு புதுவை மக்களிடையே பெரிதும் பிரபலமும் செல்வாக்கும் நன்மதிப்பும் கொண்ட தலைவராகத் திகழ்ந்து வந்தவர் ஆவார். அவரது மறைவு புதுவை அரசியலில் எளிதில் ஈடுசெய்ய இயலாத இழப்பு ஆகும். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அரசியல் உலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x