Published : 02 Nov 2023 09:24 PM
Last Updated : 02 Nov 2023 09:24 PM

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு எதிரான வழக்கில் நவ.27-ல் இறுதி விசாரணை

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலிருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வுக்கு எடுத்த வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் 27-ம் தேதி தொடங்கும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திமுக ஆட்சி காலத்தில் 2006ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2010 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் 44 லட்சத்து 59 ஆயிரத்து 67 ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமானத்துக்கு அதிகமாக சோ்த்ததாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோா் மீது கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 20 தேதி விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்குகளிலிருந்து அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை தாமாக முன்வந்து கிரிமினல் மனு ஆய்வு என்ற அடிப்படையில் வழக்கை விசாரணைக்கு எடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையும், அமைச்சர் உள்ளிட்ட குற்றம்சாட்டபட்டவர்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் ராமச்சந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, தான் விடுவிக்கப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க எந்த காரணமும் இல்லை என்று குறிப்பிட்டதுடன், சொத்து விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த தொகை, அப்போலோ மருத்துவமனைக்கு செலுத்திய தொகை ஆகியவற்றை எப்படி சட்டவிரோத வருமானம் என சொல்ல முடியும் என கேள்வி எழுப்பினார். தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பதாக இருந்தால் அனைத்து வழக்குகளையும் விசாரணைக்கு எடுக்க வேண்டுமெனவும், அமைச்சர் என்பதாலேயே தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க கூடாது என வாதிட்டார்.

தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உத்தரவில் கூறப்பட்டுள்ள காரணங்களை அடிப்படையாக வாதிடுமாறு தெரிவித்த நீதிபதி, மற்ற வழக்குகளை போல இதுவும் தங்களுக்கு ஒரு வழக்குதான் என கூறினார்.

அப்போது, கீழமை நீதிமன்றத்தில் மேல் விசாரணைக்கு உத்தரவிட்டதும், தன்னை வழக்கிலிருந்து விடுவித்ததும் வெவ்வேறு நீதிபதிகள் என்பதை சுட்டிக்காட்டியதுடன், தான் விடுவிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை என்பது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென அமைச்சர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி, அன்றைய தினம் வழக்கில் இறுதி விசாரணை தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x