Published : 01 Nov 2023 04:57 AM
Last Updated : 01 Nov 2023 04:57 AM

துறைமுக மேம்பாட்டு கொள்கை, 8 நிறுவனங்களுக்கு தொகுப்பு சலுகை: தமிழக அமைச்சரவையில் ஒப்புதல்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம்

சென்னை: தமிழக துறைமுக மேம்பாட்டுக் கொள்கை மற்றும் தமிழகத்தில் ரூ.7,108 கோடி முதலீடு செய்ய உள்ள 8 நிறுவனங்களுக்கு தொகுப்பு சலுகைகள் வழங்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஜனவரியில் நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:

தமிழகத்தில் முதலீடு செய்ய பல நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. அந்த வரிசையில், 8 நிறுவனங்கள் அமைப்பு முறையிலான தொகுப்புசலுகைகளை பெறுவதற்கும், ஏற்கெனவே உள்ள நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைக்கு சலுகைகளை பெறவும் இந்த அமைச்சரவையில் கருத்துருக்கள் ஆய்வு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ரூ.7108 கோடி முதலீட்டில் 22,536 வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்துக்கு அமைச்சரவையில் தொகுப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் மின்வாகன பாகங்கள், காலணி உற்பத்தி, விண்வெளி பாதுகாப்பு, கண்ணாடி பொருட்கள், ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறையில் முதலீடுகளை செய்ய உள்ளனர்.

மேலும், தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை குறித்து விவாதிக்கப்பட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தொழில் துறையில் முன்னணி மாநிலமாக உள்ள தமிழகத்தின் கடற்கரை 1076 கிமீ நீளமாக உள்ளது. 4 பெரிய, 17 சிறிய துறைமுகங்கள் உள்ளன. தொழில்வளர்ச்சிக்கு சிறந்த துறைமுக கட்டமைப்பு தேவைப்படுவதால், இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 16 ஆண்டுகளில் கடல்சார் வணிகங்களில் மாநிலங்களிடையே போட்டியுள்ளது. தனியார் துறை முதலீட்டை ஈர்க்கும் வகையில் இந்த கொள்கை வடிவமைக்க வேண்டியுள்ளது. மகாராஷ்டிரம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் உள்ள துறைமுகக் கொள்கைகளை ஆய்வு செய்து, அதில் உள்ள கூறுகளை உள்வாங்கி இப்போதுஉள்ள போட்டித்தன்மைற்கேற்ப துறைமுக கட்டமைப்பை மேம்படுத்த இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. கப்பல் மறுசுழற்சி, மிதவை கலங்கள் கட்டுதல், துறைமுகங்களை மேம்படுத்துதல், வணிகரீதியாக சாததியமாக்குதல், அனுமதியை எளிதாக்குதல், வியாபாரத்தை எளிதாக்குதல் அடிப்படையில் உருவாக்கப்பட்டுஉள்ளது.

மேலும், ஆழ்கடல் துறைமுக வளர்ச்சிக்குக்கு பெரிய கப்பல்களை நிறுத்தும் வகையில் துறைமுகங்களை விரிவாக்க மிகப்பெரியமுதலீடுகள் தேவைப்படுகிறது. கடல் புறம்போக்கு பகுதியில் நீண்டகால குத்தகைக்கும் இந்த கொள்கை வழிவகை செய்துள்ளது. நீர்விளையாட்டுக்கள், பசுமை துறைமுகத் திட்டங்களையும் உள்ளடக்கி இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், சேலம், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் பத்திரிகையாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பாக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை, செயின்ட்கோபைன் ஸ்ரீபெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூரிலும், ஒசூரில் ஐகால் டெக்னாலஜிஸ், இரும்பரப்பள்ளியில் நைலான் லெபாரட்டரீஸ், மற்றும் தமிழகத்தில் பாடி, ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவனம், ஒசூரில் இன்டர்நேஷனல் ஏரோஸ்பேஸ் நிறுவனம் என 8 நிறுவனங்களின் திட்டங்களுக்கு தொழில் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அமைப்பு முறையிலான தொகுப்பு சலுகைகள் தொடர்பாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது ரூ.7,108 கோடிக்கான முதலீட்டுக்கு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x