Published : 16 Jan 2018 08:41 AM
Last Updated : 16 Jan 2018 08:41 AM

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

காணும் பொங்கலை முன்னிட்டு இன்று சென்னை நகரின் முக்கிய இடங்களைக் காண வரும் பொதுமக்கள் வசதிக்காக அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கோவளம், மாமல்லபுரம், கிஷ்கிந்தா, குயின்ஸ் லேண்ட், பெசன்ட் நகர், பிராட்வே, தாம்பரம், திருவான்மியூர் மற்றும் சுற்றுலாப் பொருட்காட்சி நடைபெறும் தீவுத்திடல் ஆகிய இடங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு இச்சிறப்புப் பேருந்துகள் டோல்கேட், ஆவடி, அய்யப்பன்தாங்கல், அடையார், காரனோடை, பெரும்பாக்கம், கேளம்பாக்கம், கண்ணகி நகர், செங்குன்றம், கண்ணதாசன் நகர், கோயம்பேடு, பூவிருந்தவல்லி, வடபழனி, அயனாவரம், பெரம்பூர், வில்லிவாக்கம், சுங்குவார்சத்திரம், நடுவீரப்பட்டு, ஈஞ்சம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு, மாதவரம், பட்டாபிராம், கே.கே.நகர், அம்பத்தூர், கிண்டி, தி.நகர் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும்.

பொதுமக்களின் வசதிக்காக

மேலும், பொங்கல் பண்டிகையை முடித்து சென்னை திரும்பும் தென்மாவட்ட பொதுமக்களின் வசதிக்காக நாளை (17-ம் தேதி) அதிகாலை 3.30 மணி முதல் சென்னை புறநகர் பேருந்து நிலையம், பெருங்களத்தூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப் படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x