Published : 11 Jan 2018 09:22 AM
Last Updated : 11 Jan 2018 09:22 AM

மஸ்கோத்தா.. பீமபுஷ்டியா.. பேரவையில் ருசிகரம்

சட்டப்பேரவையில் நேற்று 2-வது நாளாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இதில் சில சுவாரஸ்யமான விவாதங்கள் வருமாறு:

201 மீனவர்கள் மாயம்

கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் (காங்கிரஸ்) பேசும்போது, ‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியை தொடர வேண்டும். அவர்கள் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘‘ஒக்கி புயலின்போது கடலுக்கு போன மீனவர்களின் எண்ணிக்கை முழுமையாக நம்மிடம் இல்லை. தற்போதுள்ள நிலவரப்படி 201 மீனவர்களைக் காணவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை தேடி வருகிறோம். மீனவர்கள் கிடைக்காத பட்சத்தில் குழு அறிக்கை பெற்று விரைவில் நிவாரணம் வழங்கப்படும்’’ என்றார்.

மஸ்கோத்தா? பீமபுஷ்டியா?

மதுரை வடக்கு தொகுதி அதிமுக உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசும்போது, ‘‘எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநர் உரையை மஸ்கோத் அல்வா என்றார். அது என்ன என்று கூகுளில் தேடிப் பார்த்தேன். தகவல் கிடைக்கவில்லை. ஆனால், எனக்கு தெரிந்து இந்த உரை பீமபுஷ்டி அல்வாவாக தெரிகிறது’’ என்றார். அமைச்சர் ஜெயக்குமார் எழுந்து, ‘‘பாதாம், பிஸ்தா உள்ளிட்டவை சேர்த்து செய்யப்பட்டதுதான் மஸ்கோத் அல்வா.இதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்’’ என்றார்.

அடுத்ததாக திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசும்போது, ‘‘ஆளுநர் உரையைப் பற்றி பலரும் பலவிதமாக கூறுகின்றனர். ஆர்.கே.நகரில் அல்வா கொடுத்ததாக கூறுகிறார்கள். அந்த அல்வா எங்கிருந்து கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை’’ என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பி.தங்கமணி, ‘‘திருமங்கலத்தில் நீங்கள் தயாரித்து கொடுத்த அல்வாதான். ஆர்.கே.நகர் மக்கள் உங்களுக்கு அல்வா கொடுத்துள்ளார்கள்’’ என்றார்.

திமுக வெளிநடப்பு

பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, குட்கா ஊழல் குறித்து விசாரணை நடத்திய அதிகாரி மாற்றப்பட்டது குறித்து கேட்டார். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் விவாதிக்க அனுமதிக்க முடியாது என்று பேரவைத் தலைவர் பி.தனபால் தெரிவித்ததால், திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

அரசியல் வேண்டாம்

அதிமுக உறுப்பினர் செம்மலை பேசும்போது சுயேச்சை உறுப்பினர் டிடிவி தினகரனை மறைமுகமாக தாக்கிப் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் பேசினார். இதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் தங்கமணி ஆகியோரும் பேசினார். தினகரனுடன் சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் காரசார வாக்குவாதம் நடந்தது. இதனால் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பேரவைத் தலைவர் தனபால் குறுக்கிட்டு, ‘‘பேரவையில் யாரும் அரசியல் பேச வேண்டாம். அதை வெளியே பேசிக் கொள்ளுங்கள். இதை பேரவையில் அனுமதித்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும்’’ என கூறி காரசார விவாதம் முழுவதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x