Published : 26 Oct 2023 09:35 PM
Last Updated : 26 Oct 2023 09:35 PM

“ஆளுநர் மாளிகை கூறுவது உண்மைக்கு புறம்பானவை” - தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

சென்னை: ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் நிரம்பிய பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்படுபவை உண்மைக்கு புறம்பானவை” என்று தெரிவித்துள்ள தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், அச்சம்பவம் மற்றும் அதையொட்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சில விளக்கங்களையும் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “25.10.2023 அன்று மதியம்‌ 3 மணியளவில்‌, கருக்கா வினோத்‌ (42 வயது - E-3 தேனாம்பேட்டை காவல்‌ நிலையத்தின்‌ வழக்கமான குற்றவாளி) என்பவர்‌ சர்தார்‌ படேல்‌ சாலை வழியாக ஆளுநர்‌ மாளிகை அருகே தனியாக பாதசாரி போன்று நடந்து வந்தார்‌. அவர்‌ பெட்ரோல்‌ நிரம்பிய நான்கு பாட்டில்களைக்‌ கொண்டுவந்து, அவற்றை ஆளுநர்‌ மாளிகை அமைந்துள்ள சர்தார்‌ படேல்‌ சாலையின்‌ எதிர்ப்புறத்தில்‌ இருந்து எறிய முற்பட்டபோது, ஆளுநர்‌ மாளிகை வெளிப்புறத்தில்‌ பாதுகாப்புப்‌ பணியிலிருந்த தமிழ்நாடு காவல் துறை போலீசாரால்‌ தடுக்கப்பட்டார்‌.

கைது செய்யப்படுவதற்கு பயந்து, சம்பவ இடத்துக்கு எதிரே சற்று தூரத்திலிருந்து இரண்டு பாட்டில்களை வீசினார்‌. அவை ஆளுநர்‌ மாளிகையின்‌ அருகே சர்தார்‌ படேல்‌ சாலையில்‌ வைக்கப்பட்டிருந்த தடுப்பரண்களுக்கு அருகே விழுந்தது. பின்னர்‌, அவர்‌ ஆளுநர்‌ மாளிகையின்‌ பிரதான வாயிலிலிருந்து சுமார்‌ 30 மீட்டர்‌ தூரத்தில்‌, பாதுகாப்பு போலீசாரால்‌ உடனடியாக கைது செய்யப்பட்டு, காவல்‌ நிலையத்துக்கு அழைத்துச்‌ செல்லப்பட்டார்‌.

இச்சம்பவத்தால்‌, பொருட்களுக்கோ அல்லது எந்த நபருக்கோ எவ்வித சேதமோ, காயமோ ஏற்படவில்லை. கண்காணிப்புக்‌ கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில்‌, மேற்படி நபர்‌ தேனாம்பேட்டையிலிருந்து, சம்பவ இடம்‌ வரை தனியாகவே வந்துள்ளார்‌ எனத்‌ தெரிய வந்துள்ளது. முதற்கட்ட விசாரணைக்குப்‌ பிறகு, 25.10.2023 அன்று J-3 கிண்டி காவல்‌ நிலையத்தில்‌ அவர்‌ மீது வழக்குப்‌ பதிவு செய்யப்பட்டு, புலன்‌ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வினோத் 4-ஆவது பெருநகர குற்றவியல்‌ நடுவர்‌ முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, 09.11.2023 வரை நீதிமன்றக்‌ காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்‌.

இந்த வினோத்‌ ஏற்கெனவே பல்வேறு குற்றச் சம்பவங்களில்‌ ஈடுபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்‌. வினோத்‌ மற்றும்‌ அவரது கூட்டாளிகள்‌ செளத்‌ போக்‌ சாலையில்‌ உள்ள டாஸ்மாக்‌ கடையில்‌ 12.08.2015 அன்று பெட்ரோல்‌ நிரம்பிய பாட்டில்களை வீசியுள்ளனர்‌. அதேபோல்‌ 13.07.2017 அன்று வினோத்‌ மற்றும்‌ அவரது கூட்டாளிகள்‌ தேனாம்பேட்டை காவல்‌ நிலையத்தில்‌ மண்ணெண்ணெய்‌ நிரம்பிய பாட்டில்களை வீச முற்பட்டபோது காவல் துறையினரால்‌ கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வினோத்‌ மீது 14 வழக்குகள்‌ நிலுவையில்‌ உள்ளன.

ஆளுநருக்கு எதிராக பகிரங்க மிரட்டல்‌, அவதூறுப்‌ பேச்சு மற்றும்‌ தாக்குதல்‌ போன்ற பல்வேறு சம்பவங்கள்‌ நிகழ்ந்துள்ளதாகவும்‌, அவை தொடர்பாக காவல் துறையினர்‌ நியாயமான முறையில்‌ முதல்‌ தகவல்‌ அறிக்கையை பதிவு செய்யவில்லை எனவும்‌, மேலும்‌ அச்சம்பவங்கள்‌ தொடர்பாக எவ்வித மேல்‌ நடவடிக்கையும்‌ எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டு, 25.10.2023 அன்று மருத்துவர்‌ செங்கோட்டையன்‌ (ஆளுநரின்‌ துணைச்‌ செயலாளர்‌) புகார்‌ அளித்துள்ளார்‌.

25.10.2023 அன்று நடந்த சம்பவம்‌ ஒரு தனிப்பட்ட நபரால்‌ ஆளுநர்‌ மாளிகைக்கு வெளியே சர்தார்‌ படேல்‌ சாலையில்‌ செய்யப்பட்ட செயலாகும்‌. இந்த நிகழ்வில்‌ புகாரில்‌ தெரிவிக்கப்பட்டது போல்‌ ஒன்றுக்கும்‌ மேற்பட்ட நபர்களால்‌ பெட்ரோல்‌ குண்டு வீசப்பட்டது எனவும்‌, அவர்கள்‌ அத்துமீறி ஆளுநர்‌ மாளிகையினுள்‌ நுழைய முற்பட்டு ஆளுநர்‌ மாளிகை வாயிற்காப்பாளர்களால்‌ தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள்‌ எனவும்‌, மேலும்‌ அங்கு வீசப்பட்ட பெட்ரோல்‌ குண்டு வெடித்தது என்றும்‌ சொல்வது அனைத்தும்‌ உண்மைக்கு முற்றிலும்‌ புறம்பானது.

அதேபோல்‌ ஏப்ரல்‌ 19, 2022 அன்று மயிலாடுதுறை சென்றபோது ஆளுநரின்‌ வாகனம்‌ தாக்கப்பட்டது என்றும்‌, இது சம்பந்தமாக காவல் துறையில்‌ புகார்‌ தெரிவிக்கப்பட்டும்‌ முதல்‌ தகவல்‌ அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்பதும்‌ உண்மைக்கு புறம்பானது. ஆளுநரின்‌ வாகனம்‌ மற்றும்‌ கான்வாய்‌ அப்பகுதியை கடந்து சென்றபின்னர்‌ அங்கு கூடியிருந்தவர்களில்‌ சிலர்‌ கருப்புக்கொடிகளை சாலையில்‌ வீசினர்‌. அக்கொடிகள்‌ ஆளுநரின்‌ வாகனம்‌ மற்றும்‌ கான்வாய்‌ முழுமையாக சென்றபின்‌ பின்னால்‌ வந்த வாகனங்கள்‌ மீது விழுந்தன. இச்சம்பவம்‌ தொடர்பாக மயிலாடுதுறை காவல்‌ நிலையத்தில்‌ வழக்கு பதிவு செய்யப்பட்டு 73 பேர்‌ கைது செய்யப்பட்டனர்‌. மேற்படி வழக்கு புலன்‌ விசாரணையில்‌ உள்ளது. மேற்படி சம்பவங்கள்‌ அனைத்திற்கும்‌ காணொளி ஆதாரங்கள்‌ உள்ளன.

மேலும்‌, ஆளுநரின்‌ கான்வாய்‌ மீது கற்கள்‌ மற்றும்‌ கட்டைகள்‌ வீசப்பட்டன என்பது முற்றிலும்‌ உண்மைக்கு புறம்பானதாகும்‌. மேலே குறிப்பிட்டுள்ளது போன்று எந்தவித சம்பவங்களும்‌ நடைபெறவில்லை. ஆளுநர்‌ மாளிகையின்‌ பாதுகாப்புக்காக சர்தார்‌ படேல்‌ சாலையில்‌ பணியில்‌ ஈடுபடுத்தப்பட்டிருந்த சென்னை பெருநகர காவல் துறையின்‌ பாதுகாப்புக்‌ காவலர்கள்‌ விழிப்புடன்‌ இருந்த காரணத்தினாலும்‌, பலத்த காவல்‌ பாதுகாப்பு செய்யப்பட்டிருந்ததாலும்‌, உடனடியாகக்‌ குற்றவாளி
கைது செய்யப்பட்டார்‌. இந்த வழக்கில்‌ முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும்‌.

ஏற்கெனவே, கண்காணிப்பு கேமரா பதிவுகள்‌ முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளன. மேற்படி வழக்கில்‌ முழுமையான நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும்‌. மேதகு ஆளுநருக்கும்‌ மற்றும்‌ அவரது மாளிகைக்கும்‌ தமிழ்நாடு காவல்‌ துறையினரால்‌ உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது” என்று தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செயய்ப்பட்டுள்ள கருக்கா வினோத் மீது அரசு அலுவலகம் மீது குண்டு வீசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக காவல் துறை பதிவு செய்துள்ள எஃப்.ஐ.ஆர் விவரம் வெளியானது.

இதனிடையே, “நாங்கள் ஆட்சி செய்கிற மாநிலத்திலேயே பெட்ரோல் குண்டு வீசவேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. திமுகவோ, அதன் தோழமை கட்சிகளோ இந்த சம்பவத்துக்கு பொறுப்பல்ல” என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். மேலும், "இது ஒரு சம்பவம். இந்த சம்பவத்தை உடனடியாக தடுத்திருக்கிறோம். உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்திருக்கிறோம். அவர் மீது விசாரணை நடைபெறுகிறது. குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார். இதில் நாங்கள் எந்தவிதமான தவறும் செய்யவில்லை. எங்காவது மனநோயாளி ஒருவர் இதுபோல வீசி சென்றால், அதற்கு நாங்கள் பொறுப்பாளியாக முடியுமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேநேரத்தில், "தமிழக காவல் துறை திமுகவினரின் உத்தரவுக்கு ஏற்ப இயங்கும் துறையாக இருப்பதால், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு விசாரணையை, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அல்லது சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x