Published : 19 Oct 2023 05:30 AM
Last Updated : 19 Oct 2023 05:30 AM

வெடி விபத்துகளில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம்: பட்டாசு கடை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது

சிவகாசி பட்டாசு கடை வெடி விபத்தில் உயிர் இழந்தோரின் உடல்களை வாங்க மறுத்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய உறவினர்கள்.

சிவகாசி/விருதுநகர்/ஓசூர்: சிவகாசி அருகே பட்டாசுக் கடைவெடி விபத்துகளில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில், கடை உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகாசி ரெங்கபாளையம் பகுதியில் உள்ள கனிஷ்கர் பட்டாசுக் கடையில் நேரிட்ட வெடி விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். விசாரணையில், விதிகளை மீறி பட்டாசு விற்பனைக் கடை அமைத்தது தெரியவந்தது.

இதையடுத்து, பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சுந்தரமூர்த்தி (43), காளீஸ்வரி, மேலாளர் கனகராஜ் (41), பணியாளர்கள் ராம்குமார்(25), ஜெயமுருகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த எம்.புதுப்பட்டி போலீஸார், சுந்தரமூர்த்தி, கனகராஜ், ராம்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

அதேபோல, சிவகாசி அருகே மாரனேரி கிச்சநாயக்கன்பட்டியில் உள்ள ஆர்யா ஃபயர் ஒர்க்ஸில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி வேம்பு உயிரிழந்தார். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல், உரிய அனுபவம் இல்லாத நபரை பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பட்டாசு ஆலை உரிமையாளர் முத்துவிஜயன், ஊழியர் குருமூர்த்தி (37) ஆகியோர் மீது மாரனேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து, குருமூர்த்தியை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட உரிமையாளர் சுந்தரமூர்த்தி.

உறவினர்கள் போராட்டம்: சிவகாசி ரெங்கபாளையம் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் சடலங்கள், பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன. தொடர்ந்து, 6 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்டனர்.

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல் துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், பாக்கியலட்சுமி என்பவரது சடலத்தை மட்டும் அவரின் உறவினர்கள் வாங்கிச் சென்றனர். எனினும், உயிரிழந்த மற்றவர்களின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆட்சியர் அலுவலகம் சென்ற அவர்களிடம், ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்களது கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து, விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் சென்று, உடல்களை பெற்றுச் சென்றனர்.

அத்திப்பள்ளி விபத்து: கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசுக் கடையில் கடந்த 7-ம் தேதி ஏற்பட்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த 7 பேர், பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் சில நாட்களுக்கு முன்னர் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிர் இழந்தனர். இந்நிலையில், வாணியம்பாடி வெள்ளக்குட்டையைச் சேர்ந்த ராஜேஷ்(20) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தார். இதையடுத்து, உயிர் இழப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x