Published : 18 Oct 2023 02:04 PM
Last Updated : 18 Oct 2023 02:04 PM

''மகளிர் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் சிறை தண்டனை'' - சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே | கோப்புப் படம்

சென்னை: சென்னை மாவட்டத்தில் செயல்படும் மகளிர் விடுதிகள் வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விடுத்துள்ள பத்திரிகை செய்தி: சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015-ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள் பதிவு செய்வதற்கு https://tnswp.com என்ற இணையதள ஆன்லைன் போர்ட்டல் மூலமாக பதிவு செய்யலாம்.

அதன்படி அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டிடம் / வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச் சான்று, தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று மற்றும் சுகாதாரச்சான்று ஆகிய ஆவணங்களுடன் மேற்கண்ட ஆன்லைன் போர்ட்டலில் வருகிற 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும், அவ்வாறு முறையாக பதிவு செய்யப்படாத தனியார் விடுதி மற்றும் இல்ல நிர்வாகிகள் மீது சட்டப்படி காவல்துறையின் மூலமாக வழக்குப்பதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x