Published : 01 Jan 2018 10:20 AM
Last Updated : 01 Jan 2018 10:20 AM

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது 6 மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவு

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த முடிவை கடந்த 6 மாதங்களூக்கு முன்பே எடுத்துவிட்டதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2016 டிசம்பர் மாதம் உடல் நலம் குன்றிய திமுக தலைவர் கருணாநிதியை, கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். இதை திமுகவின் முக்கிய பொறுப்பில் உள்ளவர் ஒருவர் விரும்பவில்லை எனவும், ரஜினியை கோபாலபுரம் இல்லத்துக்கு வர அனுமதித்தவர்களை அந்த முக்கியப் பிரமுகர் கடிந்துகொண்ட தகவலும் ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்செட் ஆனாராம் ரஜினி.

‘ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பாதுகாப்பு என்கிற பெயரில் ரஜினிக்கு காட்டப்பட்ட கெடுபிடிகள், உடல்நலம் குன்றிய ஒரு அரசியல் கட்சித் தலைவரை சந்தித்ததை பிடிக்காத அதே கட்சியின் அரசியல் பிரமுகர் என அடுத்தடுத்து முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களால் நெருக்கடிகள் கொடுக்கப்படவே, அவர் அரசியலில் இறங்கும் முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

மேலும், அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் மறைவு, திமுக தலைவர் கருணாநிதியின் ஓய்வு காரணமாக

தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள பலவீனமான சூழல், மாற்று அரசியல் கட்சி தொடங்க சாதகமானது என சிலர் வழங்கிய ஆலோசனைகளையும் ரஜினி தீவிரமாக ஆய்வு செய்தார்.

இதையடுத்து அரசியலில் இறங்கும் முடிவு குறித்து தனது ரசிகர்களின், குறிப்பாக தனது ஆரம்ப கால ரசிகர்கள் என்ன மனநிலையில் உள்ளனர் என்பதை தெரிந்துகொண்டார்.

மே மாதத்திலிருந்து டிசம்பர் மாதம்வரை அரசியலில் இறங்குவது குறித்து தீவிரமாக சிலரிடம் ரஜினி ஆலோசனை செய்திருக்கிறார். இதன் முதல்கட்டமாக திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலவும் கோஷ்டி பிரச்சினையை சரி செய்யவும், சமரச பேச்சுவார்த்தை மூலம் மாவட்ட நிர்வாகிகளை நியமிக்கவும் ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன.

ரஜினி ரசிகர் நற்பணி மன்ற அகில இந்திய தலைவராக முன்பு தீவிரமாக செயல்பட்டுவந்த சத்யநாராயணா, இப்போது மன்ற செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டுவிட்டார். அவருக்கு சிறுநீரக பிரச்சினை இருந்ததால் அவருக்கு தங்குவதற்கு இல்லமும், பொருளாதார ரீதியாகவும் ரஜினி உதவி செய்து ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டார் என மன்ற நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இப்போது மன்ற பணிகளை ரஜினியிடம் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த சுதாகர் கவனித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x