Published : 16 Oct 2023 01:02 PM
Last Updated : 16 Oct 2023 01:02 PM

அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்தி அரசாணை வெளியீடு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கினை நடத்திடும் அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று (அக்.16) தலைமைச் செயலகத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கினை நடத்திடும் அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை விழுப்புரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் டி.எஸ்.சுப்ரமணியன், சென்னை மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் தேவராஜன், ராமநாதபுரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் கார்த்திகேயன் மற்றும் சென்னை மாநகர உரிமையியல் அரசு வழக்கறிஞர் ஷாஜகான் ஆகியோரிடம் வழங்கினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கினை நடத்திட அரசு வழக்கறிஞர்கள் பலர் நியமிக்கப்பட்டு, சுமார் 700-க்கும் மேற்பட்ட அரசு வழக்கறிஞர்கள் அரசு சார்பாக வழக்கினை நடத்தி வருகின்றனர்.

இந்நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தும் அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதம் 1995-ஆம் ஆண்டுக்குப் பிறகு மாற்றி அமைக்கப்படாமல் இருந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி 2006-ம் ஆண்டு பதவியேற்றதும், அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தை மாற்றி அமைத்திட 2007-ம் ஆண்டு ஒரு குழுவை அமைத்து, அக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், 2011-ம் ஆண்டு கட்டண விகிதம் கணிசமாக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது. 2011-ம் ஆண்டுக்குப்பின், 10 வருட காலம் கட்டண விகிதம் ஏதும் மாற்றி அமைக்கப்படவில்லை.

அரசு வழக்கறிஞர்களின் பங்களிப்பு மற்றும் பணிப்பளுவினை கருத்தில் கொண்டு இவர்களது கட்டண விகிதத்தை மாற்றி அமைப்பது அவசியம் எனக் கருதி அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா அளித்த பரிந்துரை கடிதத்தை தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார்.

இதனை அரசு கவனமுடன் பரிசீலித்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் பரிந்துரையின் அடிப்படையில், அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் உயர்நீதிமன்றம் தவிர்த்த அனைத்து நீதிமன்றங்களில் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை நடத்தும் அனைத்து அரசு வழக்கறிஞர்களும் பயன் பெறுவார்கள்.

இந்நிகழ்ச்சியில், சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x