Published : 15 Oct 2023 04:00 AM
Last Updated : 15 Oct 2023 04:00 AM

போக்சோ வழக்கில் பெற்றோர், உறவினர் நலனை விட பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனே முக்கியம்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: போக்சோ வழக்குகளில் பெற்றோர் மற்றும் உறவினர்களின் நலனை விட பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனே முக்கியம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் டிஜிபியான திலகவதியின் மகன் டாக்டர் பிரபு திலக் மற்றும் அவரது மனைவி ஷ்ருதி ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது 2 குழந்தைகளும் தந்தை வசம் உள்ளனர். விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

கடந்தாண்டு டிச.23 அன்று தாய் ஷ்ருதியின் வீட்டில் இருந்த தனது உடைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வரச் சென்ற தனது மகளை ஷ்ருதி திட்டியதாகவும், ஷ்ருதியின் சகோதரர் விஜய் ஆனந்த், பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாகவும் பிரபு திலக் வடபழனி போலீஸில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் ஷ்ருதிக்கு முன்ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம், விஜய் ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி விஜய் ஆனந்த் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘இந்த வழக்கின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக மனுதாரர் தெரிவித்தாலும் போலீஸார் இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை. போலீஸாரும் மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். திரைமறைவில் ஒளிந்து கொண்டு, தான் ஒரு அப்பாவி என மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது.

இது போன்ற போக்சோ வழக்குகளில் தாய், தந்தை மற்றும் உறவினர்களின் நலனை விட பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனே முக்கியம். போக்சோ வழக்குகளில் பாதிக்கப்படும் சிறுமிகளின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். எனவே மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது" என மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து விஜய் ஆனந்த்சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x