Last Updated : 15 Oct, 2023 11:30 PM

4  

Published : 15 Oct 2023 11:30 PM
Last Updated : 15 Oct 2023 11:30 PM

“2024 தேர்தலில் 400+ தொகுதிகளில் வென்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார்” - எல்.முருகன் நம்பிக்கை

புதுச்சேரி மாநில பாஜக புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வகணபதி எம்.பி பாராட்டு விழாவில் எல்.முருகன். அருகில் அமைச்சர்கள் நமச்சிவாயம் மற்றும் சாய் ஜெ.சரவணன்குமார்.

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜக புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வகணபதி எம்.பி-க்கு பாராட்டு விழா மரப்பாலம் சந்திப்பில் உள்ள தனியார் கன்வென்ஷன் சென்டரில் ஞாயிற்றுக்கிழமை (அக். 15) அன்று நடைபெற்றது.

இந்த பாராட்டு விழாவுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமை தாங்கினார். புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள், ஆதரவு எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:

பாஜக தியாகத்துக்கு பெயர் போன கட்சி. பாஜகவின் தொண்டர்கள் சுயநலமற்றவர்கள். நிர்வாகிகள் பாரத தேசம் முக்கியம் என்று இருப்பவர்கள். பாஜகவின் நோக்கமே முதலில் நாடு, இரண்டாவது கட்சி, மூன்றாவது நாம் என்று இருக்கிறது.

1980-ல் வெறும் 2 எம்பிக்களை கொண்டிருந்த கட்சி, இன்றைக்கு பல கோடி தொண்டர்களையும், உலகில் அதிக உறுப்பினர்களையும் கொண்ட கட்சி தான் பாஜக. இப்படிப்பட்ட கட்சியில் உள்ள நாம் சிறந்த தலைவரை கொண்டிருக்கின்றோம்.

சாமிநாதன் தலைவராக இருந்தபோது புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியை கொண்டு வந்தார். இப்போதுள்ள தலைவர் செல்வகணபதி நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினரை இங்கிருந்து இன்னும் 4 மாதத்தில் அனுப்பும் பொறுப்பை ஏற்றிருக்கின்றார்.

பாஜகவை இங்கு முதன்மையான கட்சியாக மாற்றுவதற்கு நாம் அனைவரும் கடுமையாக வேலை செய்ய வேண்டும். இங்குள்ள தலைவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நம்முடைய ஒரே இலக்கு 2024-ல் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். அதுதான் இன்றைக்கு நம்முடைய கோஷமாக இருக்கிறது. நிச்சியமாக 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பிடித்து மீண்டும் நரேந்திர மோடி மிகப்பெரிய வெற்றி பெற இருக்கிறார். அந்த வெற்றியில் நம்முடைய புதுச்சேரியின் நாடாளுமன்ற உறுப்பினரும் இருக்க வேண்டும். அதுதான் நம்முடைய ஒவ்வொருவருடைய கனவு, லட்சியம், எண்ணம்.

அதை நோக்கித்தான் நாம் அடியடுத்து வைக்கின்றோம். உலகம் வியக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். சேவை, நல்ல அரசாங்கம், ஏழை மக்களின் நலனை தாரக மந்திரமாக கொண்டு வேலை செய்து கொண்டிருக்கின்றோம்.

நரேந்திர மோடி பிரதமராக மீண்டும் வருவதன் மூலமாக இந்த பாரத தேசம் உலகில் வல்லரசு தேசமாக மாற வேண்டும். 2047-ல் அனைத்தும், அனைத்து மக்களுக்கும் கிடைக்கின்ற மிகப்பெரிய வல்லரசு நாடாக இருக்க வேண்டும். அதை நோக்கித்தான் நாம் அடியெடுத்து வைத்திருக்கின்றோம். பிரதமரின் ஒவ்வொரு அசைவும் நமது தேசத்தை உலகளவில் அரங்கேற்றி இருக்கிறது.

சமீபத்தில் ஜி20 மாநாடு நடத்தினோம். அதனை நாமெல்லாம் அது ஒரு மாநாடு தானே என்று நினைத்தோம். ஆனால், உலக நாடுகள் போற்றுகின்ற வகையில் ஜி20-யை மிகப்பெரிய திருவிழாவாக நாம் நடத்தியுள்ளோம்.

அதேபோல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. உலகில் எந்த நாடும் செய்யாத ஒன்றை நமது பாரத தேசம் முதன் முதலில் செய்து காட்டியுள்ளது. இது இந்தியாவில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் பெருமையையும், கர்வத்தையும் கொடுக்கிறது.

வெறும் ரூ.600 கோடி பட்ஜெட்டில் நம்முடைய விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்து உலக நாடுகள் வியக்கும் வகையில் சந்திரயான்-3னை தயாரித்து செலுத்தியுள்ளனர். இந்த சாதனைகள் தொடர வேண்டும். இன்றைக்கு பாரத தேசம் ஒவ்வொரு துறையிலும் மிகப்பெரிய முனனேற்றத்தை அடைந்து கொண்டிருக்கிறது. இந்த முன்னேற்றம் நீடிக்க நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். அதை நோக்கி நாம் அனைவரும் அந்த பாதையில் செல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x