Published : 03 Jan 2018 08:46 PM
Last Updated : 03 Jan 2018 08:46 PM
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து அரசியல் பிரவேசத்திற்காக ஆசி பெற்றதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என கடந்த 21 ஆண்டுகளாக கூறிவந்த நிலையில் கடந்த டிச.31 அன்று தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். புதுக் கட்சி தொடங்க உள்ளதாகவும் சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் உரிய முடிவெடுத்து போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.
ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் ஆரம்ப காலத்தில் 1996-ம் ஆண்டு திமுகவுக்காக வாக்கு கேட்டார். அதிமுகவுக்கு எதிராக ரஜினியும் வாய்ஸ் கொடுத்தார். அதன் பின்னர் ரஜினி திமுக தலைவர் கருணாநிதியுடன் நட்போடு இருந்து வருகிறார். இந்நிலையில் ரஜினி அரசியல் அறிவிப்புக்குப் பின் அரசியல் தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை.
ஆன்மீகத் தலைவர்களை மட்டும் சந்தித்த நிலையில் ஊடகங்களில், சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை ரஜினி சந்திப்பார் என்று காலை முதல் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆண்டுதோறும் புத்தாண்டு அன்று கருணாநிதியை சந்தித்து ரஜினி ஆசி பெறுவது வழக்கம், இந்த ஆண்டு அரசியல் அறிவிப்பால் தள்ளிப்போனது மற்றபடி புதிதாக ஒன்றுமில்லை என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதியை சந்தித்தார். அவரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
ரஜினி வருகையை முன்னிட்டு ரஜினிகாந்த் ரசிகர்கள் கோபாலபுரத்தில் குவிந்திருந்தனர். ரஜினி வாழ்க என்று கோஷமிட்டனர். உள்ளே சென்ற ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். சுமார் 20 நிமிடம் அங்கு இருந்தார்.
பின்னர் வெளியே வந்த ரஜினிகாந்த், ''கருணாநிதியுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. புத்தாண்டு அன்று அவரை சந்தித்து ஆசி பெறுவேன். இந்த ஆண்டும் அவரைச் சந்தித்தேன். அரசியல் கட்சி தொடங்க உள்ளது பற்றி தெரிவித்து ஆசி பெற்றேன்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT