வத்திராயிருப்பு அருகே அத்தி கோயில் ஆற்றில் காட்டாற்று வெள்ளம்: 70க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்பு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அத்திகோயில் ஆற்றில் திடீரென ஏற்ப்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மதுரையை சேர்ந்த 70க்கும் மேற்ப்பட்டோரை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அத்தி கோயில் பகுதியில் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு மதுரை மாவட்டம் கூடல்நகரை சேர்ந்த சாஜுக்(48) என்பவர் தனது பேரனுக்கு மொட்டை எடுப்பதற்காக தனது உறவினர்கள் 70-க்கும் மேற்பட்டோர் உடன் நேற்று காலை அத்திகோயில் வந்துள்ளார். பிற்பகல் 3 மணிக்கு மேல் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அத்தி கோயில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் தர்காவில் இருந்த 70 க்கும் ஆற்றை கடக்க முடியாமல் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தவித்து வந்தனர். இதுகுறித்து அவர்கள் 108 எண்ணிற்கு அழைத்து உதவி கேட்டுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மூலம் வத்திராயிருப்பு போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின் ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் கயிறு மூலம் சிலர் கரையை கடந்தனர். தீயணைப்பு துறையினர் வந்து அங்கிருந்த அனைவரையும் கயிறு மூலம் மீட்டு மறுகரைக்கு அழைத்து வந்தனர். அதன்பின் அனைவரும் வாகனங்கள் மூலம் மதுரைக்கு பத்திரமாக திரும்பி சென்றனர்.
