14 மாவட்டங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் வழக்கு: விசாரணை அக்.16-க்கு ஒத்திவைப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரை: மதுரை, தேனி, திண்டுக்கல் உட்பட 14 மாவட்டங்களில் 20 இடங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணை அக்.16-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

விஜயதசமி நாளான அக். 22-ல், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், புதுகோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கரூர், தென்காசி, தஞ்சாவூர், சிவகங்கை உள்பட 14 மாவட்டங்களில் 20 இடங்களில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களில், இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வகையிலும், அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டியும் விஜயதசமி நாளான அக். 22-ல் ஆர்எஸ்எஸ் சார்பில் சீருடை அணிந்து, இசை வாத்தியத்துடன் மாலையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி அந்தந்த காவல் நிலையங்களில் மனு அளிக்கப்பட்டது. இதுவரை அனுமதி தரவில்லை.

கடந்த ஆண்டிலும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்பிறகும் அனுமதி தரவில்லை. நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டு அனுமதி பெறப்பட்டது. எனவே, இந்தாண்டு ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை நீதிபதி இளங்கோவன் விசாரித்தார். பின்னர் நீதிபதி, ஆர்எஸ்எஸ் ஊர்வலம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் தனித்தனியாக மனுக்களை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே இந்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றலாம் என்றார்.

அப்போது, கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீராகதிரவன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி ஆகியோர், இந்த மனுக்களை இங்கேயே விசாரிக்கலாம். அக்.30-ல் தேவர் ஜெயந்தி நடைபெறுவதால் விசாரணையை அக்.31-க்கு ஒத்திவைக்கலாம் என்றனர்.

ஆர்எஸ்எஸ் தரப்பு வழக்கறிஞர்கள், விசாரணையை அக்.16-ல் நடத்தலாம் என்றனர். இதனை அரசு வழக்கறிஞர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அனைத்து மனுக்கள் மீதான விசாரணையை அக்.16, மதியம் 2.15 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in