மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

கோப்புபடம்
கோப்புபடம்
Updated on
1 min read

மதுரை: மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் 20 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கக் கோரி உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வருகிறது.

இந்த ஆண்டுக்கான விஜயதசமியையொட்டி ஆர்எஸ்எஸ் தரப்பில் , மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 20 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கோரி அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தரப்பில், அனுமதி கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி தஞ்சாவூர், மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, கரூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி, பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பேரணியில் ஆர்எஸ்எஸ் தொண்டர் படையினர் காக்கி பேன்ட், வெள்ளை நிற சட்டை, தொப்பி அணிந்து மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வழித் தடத்தில் பேரணியாக செல்ல அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இம்மனுக்கள் விரைவில் பட்டியலிடப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in