Published : 16 Jan 2018 10:35 AM
Last Updated : 16 Jan 2018 10:35 AM

ராமேஸ்வரத்தில் குவிந்த சீக்கியர்கள் குருநானக்கை நினைவு கூர்ந்து மகிழ்ச்சி

தமிழகம் முழுவதுமிலிருந்து சீக்கியர்கள் ராமேஸ்வரத்தில் திரண்டு மகர சங்கராந்தி பண்டிகையைக் கொண்டாடி சீக்கிய மதத்தின் நிறுவனர் குருநானக்கை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்.

குரு நானக் சீக்கிய மதத்தின் நிறுவனர் மற்றும் பத்து சீக்கிய குருமார்களில் முதல் குரு ஆவார். இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சுற்றியதோடு மட்டுமின்றி மேற்கே அரபு நாடுகளுக்கும், தெற்கே இலங்கைக்கும் சென்று அன்பை போதித்தார்.

குருநானக் இலங்கையில் பயணம் மேற்கொண்டதற்கு ஆதாரமாக 10 சமஸ்கிருத மொழியிலான கல்வெட்டுக்கள் சமீபத்தில் மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை செல்லும் வழியில் குருநானக் 1511ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் தங்கியிருந்தார். குருநானக் தங்கியிருந்ததை நினைவு கூரும் வகையில் ராமேஸ்வரத்தில் 1885ம் ஆண்டில் குருத்வாரா கோயிலும் நிறுவப்பட்டது.

இந்நிலையில் அறுவடைத் திருவிழாவான பொங்கல் - மகர சங்கராந்தி கொண்டாடுவதற்கு தமிழகத்தில் வசிக்கும் சீக்கியர்கள் ராமேஸ்வரம் குருத்வாராவில் ஒன்று திரண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ராமேஸ்வரம் குருத்வாராவிலிருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் குடும்பத்தினருடன் ஊர்வலமாகப் புறப்பட்டனர். இந்த ஊர்வலத்திற்கு பாஞ்ச் பியாரே என்று சொல்லப்படும் ஐவர் கொண்ட குழு, கையில் வாளுடன் தலைமை தாங்கி வழி நடத்திச் சென்றது.

இதனைத் தொடர்ந்து நகர் கீர்த்தன் குழுவினரின் சீக்கிய சமயப்பாடல்களைப் பாடியவாறும் மேளங்களை இசைத்தும் செல்ல ஊர்வலத்தில் கலந்து கொண்டோரும் அதற்கேற்றபடி பாடிச் சென்றனர்.

ஊர்வலம் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் நான்கு ரதவீதிகளைச் சுற்றி வந்து இறுதியில் மீண்டும் குருத்வாராவை வந்தடைந்தது.

மகர சங்கராந்தியின் முக்கிய அம்சமான சொக்கப்பனைபோல் தீ மூட்டி சுற்றி பாங்க்ரா நடனமாடும் நிகழ்ச்சி ராமேஸ்வரம் குருத்வாராவில் அன்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி குறித்து பஞ்சாப் அசோசியேஷன் உறுப்பினர் பல்பீர் சிங் லோடா செய்தியாளரிடம் கூறியதாவது,

தமிழகம் முழுவதும் வசிக்கும் பல்வேறு அரசு பணி புரியும் சீக்கியர்கள், வியாபாரம் செய்வோர் ஜனவரி 14,15,16 ஆகிய மூன்று நாட்கள் ராமேஸ்வரம் குருத்வாராவில் கூடி, பஞ்சாபிகளின் அறுவடைத் திருநாளான மகர சங்கராந்தியைக் கொண்டாடுவதுடன் ராமேஸ்வரத்தில் தங்கியிருந்த சீக்கிய மதத்தின் முதன்மை குருவான குருநானக்கை நினைவு கூர்கிறோம். இதன் மூலம் தமிழகம் முழுவதும் இருக்கும் சீக்கியர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ள வாய்ப்பாகவும் உள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியையொட்டி ஜனவரி 14,15,16 ஆகிய மூன்று நாட்கள் ராமேஸ்வரம் குருத்வாரா சமூக சமையலறையில் தயாராகும் ரொட்டி, தால் பருப்பு, இனிப்பிலான ’லங்கார்' உணவு அனைத்து சமுதாய மக்களுக்கும் மூன்று வேளையும் வழங்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x