Published : 09 Oct 2023 05:34 AM
Last Updated : 09 Oct 2023 05:34 AM

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கோப்புப்படம்

சென்னை: மதுரை, திருச்சி உள்ளிட்ட 10-க்கும்மேற்பட்ட மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (அக். 9)முதல் 11-ம் தேதி வரை சில இடங்களிலும், வரும் 12-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 13,14-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரைமற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும் 10, 11-ம் தேதிகளில் மேற்கூறிய மாவட்டங்களில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் நீங்கலாக இதர மாவட்டங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமானமழை பெய்யக்கூடும். அதிகபட்சவெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

அக். 8-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக மதுரை மாவட்டம் எழுமலையில் 10 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 6 செ.மீ., திண்டுக்கல் மாவட்டம் புகையிலை நிலையம், வேடசந்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, சின்னார் அணை, மதுரை மாவட்டம் பேரையூர், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா, வேலூர் மாவட்டம் அம்முண்டி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழைபதிவாகியுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x