Published : 09 Oct 2023 05:06 AM
Last Updated : 09 Oct 2023 05:06 AM

ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரி துறை 4-வது நாளாக சோதனை

சென்னை: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக நேற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அரக்கோணம் தொகுதி திமுகஎம்.பி.யும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகன், கல்வி நிறுவனம், மருத்துவமனை உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததை தொடர்ந்து, அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறைஅதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது தொடர்பான குற்றச்சாட்டில், அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை அப்போது முடக்கியது.

இந்நிலையில், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக ஜெகத்ரட்சகன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அவருடன் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 5-ம் தேதிசோதனை நடத்தினர். சென்னையில் உள்ள அவரது வீடுகள், ரேலா மருத்துவமனை, பாலாஜிமருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆழ்வார் ஆய்வு மையம், அடுக்குமாடி குடியிருப்புகள், நியூ டெல்டா நிறுவன அலுவலகம், அக்கார்டு நட்சத்திர ஓட்டல் மற்றும் ஜெகத்ரட்சகனின் உறவினர்கள், நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்கள், புதுச்சேரியில் அவருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காஞ்சிபுரத்தில் உள்ள மதுபான ஆலைகள், அங்கு பணியாற்றும் ஊழியர் வீடு என பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

முக்கிய ஆவணங்கள் சிக்கின: இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத பணம் சிக்கியதாக கூறப்படுகிறது.

வருமான வரி சோதனை நடக்கும்போதே, அமலாக்கத் துறை அதிகாரிகளும், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஜெகத்ரட்சகனிடம் விசாரணை நடத்தினர்.

ஒருசில இடங்களில் சோதனை முடிந்த நிலையில், ஜெகத்ரட்சகனின் வீடு, கல்வி நிலையங்கள், அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 4-வது நாளாக நேற்றும் சோதனை நடைபெற்றது.

இன்னும் ஓரிரு நாட்கள் வரைசோதனை நீடிக்கும். அதன் பின்னரே, கைப்பற்றிய ஆவணங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியிடப்படும் என்று வருமான வரித் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x