Last Updated : 09 Oct, 2023 04:00 AM

 

Published : 09 Oct 2023 04:00 AM
Last Updated : 09 Oct 2023 04:00 AM

கிருஷ்ணகிரியில் பட்டாசுக் கடைகளை கண்காணிக்க தனி அலுவலரை நியமிக்க வலியுறுத்தல்

பிரதிநிதித்துவப் படம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசுக் கடைகளைக் கண்காணிக்க தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை உட்பட பல்வேறு பகுதிகளில் 136 நிரந்தரப் பட்டாசுக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை 29-ம் தேதி, கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசுக் கடைகளில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா, அனுமதிக்கப்பட்ட அளவில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போதே, கெலமங்கலம் அருகே உள்ள பட்டாசுக் கடையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

அரசு அலுவலர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து நடைபெற்ற ஆய்வில், விதிமுறைகளை பின்பற்றாத 48 பட்டாசுக் கடைகளின் உரிமங்களை ரத்து செய்து ஆட்சியர் கே.எம்.சரயு உத்தரவிட்டார். இந்நிலையில், ஓசூர் அருகே கர்நாடகா எல்லை அத்திப் பள்ளியில் நேற்று முன் தினம் நடந்த பட்டாசுக் கடை வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து எதிர்பாராமல் நடந்த விபத்தாக இருந்தாலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டதே உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்தது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசுக் கடைகளை கண்காணிக்கவும், விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை தொடர் ஆய்வு செய்யவும் தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பட்டாசுக் கடை உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது: சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளில் 35 சதவீதம், ஓசூர் அருகே மாநில எல்லையில் அமைந்துள்ள ஜுஜுவாடி, கர்நாடகா மாநில எல்லையில் உள்ள அத்திப் பள்ளியில் விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்காக இங்கு அதிகளவில் பட்டாசுகள் விற்பனையாகும்.

இதனால், அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும், அதிகளவில் இருப்பு வைக்கப்படுகிறது. பொதுவாக கடைகளில் 100 கிலோ வரை கம்பி மத்தாப்பூ, பேன்சி ரக பட்டாசுகளும், 500 கிலோ வெடிக்கும் பட்டாசுகளை வைக்க உரிமம் அளிக்கப்படுகிறது. சிலர் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.

எனவே, வெடிப்பொருட்கள் சட்டத்தை பின்பற்றும் வகையில், வட்டாட்சியர் அளவிலான தனி அலுவலர்களை நியமித்து, சுழற்சி முறையில் அனைத்துக் கடைகளையும் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x